இந்த வலைப்பதிவில் தேடு

'குரூப் - 4 முறைகேடு: பின்னணியில் உள்ள கேள்விகள்

சனி, 25 ஜனவரி, 2020



குரூப் - 4 தேர்வு முறைகேடுகளுக்கு, தேர்வு நடைமுறையில் இருந்த, பல்வேறு ஓட்டைகளே காரணம் என, தெரிய வந்து உள்ளது.

தேர்வுகளில், 'காப்பி' அடித்தல், வினாத்தாள் வெளியாதல் போன்ற முறைகேடுகள் தான், முந்தைய காலங்களில் நடந்தன. விடைத்தாளை மாற்றும் சம்பவங்களும், சில நேரங்களில் நடந்துள்ளன. கணினி வழியாக திருத்தப்படும், ஓ.எம்.ஆர்., விடைத்தாள்களும் திருத்தம் செய்யப்பட்டு, முறைகேடுகள் நடந்துள்ளன. 15 ஆண்டுகளுக்கு முன், டி.என்.பி.எஸ்.சி., தேர்வில், ஊட்டியில் இருந்து விடைத்தாள்களை எடுத்து வர தாமதமானது.


இது குறித்து, அதிகாரி கள் விசாரித்த போது, வழியில் யானை வழி மறித்ததால், வாகனம் புறப்பட தாமதமானதாக, சம்பந்தப்பட்ட தாசில்தார் மற்றும் வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். பின்னர் நடந்த விசாரணையில், அந்த விடைத்தாள்கள் வழியில் திருத்தப்பட்டது தெரிய வந்தது. அதேபோல, 2012ம் ஆண்டிலும், கடலுார் மாவட்டத்தில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் முறைகேடு நடந்ததாக கண்டறியப்பட்டது. இது குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர். அதன் நிலை என்னவென்று தெரியவில்லை.



நடைமுறையில் குளறுபடி



தற்போது நடந்த முறைகேடுகளுக்கு, தேர்வு நடைமுறையில் உள்ள குளறுபடிகள் காரணமாக இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.விடைத்தாள் திருத்தம், ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் நடந்ததா; ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களை மட்டும், தேர்வு செய்தது ஏன்? தேர்வு மையங்களில், கண்காணிப்பாளர்களை நியமித்தது யார்; போலீஸ் கண்காணிப்பு இருந்ததா; பணியில் இருந்தவர்கள் என்ன செய்தனர்?


தேர்வு மையங்களில் இருந்து விடைத்தாள் கட்டுகள், கருவூலங்களுக்கோ அல்லது தாசில்தார் அலுவலகத்துக்கோ, உரிய நேரத்தில் கொண்டு வரப்பட்டதா; விடைத்தாள் கட்டுகளை, 'சீல்' வைத்தவர்கள் யார்? அதை பார்த்து, சாட்சியாக கையெழுத்திட்டவர்கள் யார் என்ற, கேள்விகள் எழுந்துள்ளன.



பிரித்தது எப்போது?

விடைத்தாள் கட்டுகளை, மீண்டும் பிரித்தது எப்போது; அப்போது, 'சீல்' சரிபார்க்கப்பட்டதா; தாசில்தார் மற்றும் அரசு ஊழியர்கள் கட்டுப்பாட்டில், பல மணி நேரம் விடைத்தாள்கள் இருந்ததை, தேர்வு முடிவுக்கு முன்பே விசாரிக்காதது ஏன்?


விடைத்தாளில் விடையை மாற்ற, அழிக்கக்கூடிய மை எங்கிருந்து வந்தது; முறைகேடுக்காக பணம் கொடுத்த, 99 பேரையும் ஒருங்கிணைத்த இடைத்தரகர்கள் யார்? ராமநாதபுரம் மாவட்டத்தை தேர்வு செய்தது எப்படி; அங்கு, தேர்வு பணிகளுக்கு ஊழியர்களை அமர்த்தும் பொறுப்பில் இருந்தது யார் என்ற, சங்கிலி தொடர் கேள்விகள் எழுந்துஉள்ளன. விடைத்தாள் கட்டுகளை எடுத்து சென்ற, வாகனத்தின் பொறுப்பாளர், டிரைவர் யார் என்பதும், விசாரிக்கப்பட வேண்டிய விஷயங்கள்.


பரிந்துரை



இந்த முறைகேடுக்கு சம்மதித்து, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்த தேர்வர்கள், சில பயிற்சி மையங்களின் வழியாக பரிந்துரை செய்யப்பட்டுஉள்ளனர். அந்த பயிற்சி மையங்களை நடத்துவோருக்கும், முறைகேடுக்கும் என்ன தொடர்பு; விடைத்தாள் மற்றும் வினாத்தாள் அச்சடிப்பை, குறிப்பிட்ட கான்ட்ராக்டர், பல ஆண்டுகளாக மேற்கொண்டுள்ளார்.



அரசியல் தொடர்பு




இந்த கான்ட்ராக்ட் முறை வெளிப்படையாக நடந்ததா; அரசியல் அழுத்தம் காரணமாக நடந்ததா; குரூப் - 4 தேர்வு முறைகேட்டில், அரசியல் கட்சியினர், அமைப்பினர் யாரும் தொடர்பில் உள்ளனரா. அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற, நுாற்றுக்கணக்கான கேள்விகளும், குளறுபடிகளும், குரூப் - 4 தேர்வர்களை, கடும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.



நல்ல அதிகாரிகள் இருந்துமா?



டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமார் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் ஆகியோர், இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள். இவர்கள் பதவி ஏற்கும் முன்பே, டி.என்.பி.எஸ்.சி.,யில், நுாற்றுக் கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் சிலர், தேர்வு முறைகேடுகளில் உடந்தையாக இருந்தது, கடந்த ஆண்டுகளில் நடந்த, போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

ஆனால், இந்த இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும், டி.என்.பி.எஸ்.சி., ஊழியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, நிலைமையை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்ததால், பல தேர்வுகள், வெளிப்படையாக, நேர்மையாக நடத்தப்பட்டுள்ளன. ஆனால், தலைமையில் உள்ள அதிகாரிகள், நேர்மையானவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு கீழ் பணியாற்றுவோர், தேர்வு மையம் வரை, தங்கள் கரங்களை நீட்டியதால், இந்த விவகாரம் எழுந்துள்ளது.

ஆனாலும், இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும், எழுத்துப்பூர்வ புகார்கள் இல்லாத நிலையிலும், இந்த விவகாரத்தில் அதிரடி விசாரணை நடத்தி, முறைகேட்டை அம்பலப்படுத்தியுள்ளனர்.



அழியும் மையில் ஏற்கனவே முறைகேடு


ext-align: justify;"> ஏற்கனவே, அழியும் மை முறைகேடு, 2018ல் அரங்கேறியுள்ளது. அதாவது, தஞ்சை மாவட்டம், கொள்ளிடத்தில், ஆற்று மணல் வாங்குவதற்கான அனுமதி சீட்டில், அங்குள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில், அழியும் மை பயன்படுத்தப்பட்டது. ஒரு அனுமதி சீட்டை வாங்கி விட்டு, அதில் உள்ள எழுத்தை அழித்து, மாற்றி எழுதி, பல முறை பயன்படுத்தி மணல் எடுத்து, முறைகேடு நடந்ததை, போலீசார் கண்டுபிடித்தனர். இந்நிலையில், தேர்விலும், இந்த அழியும் மை பேனாவால், இடைத்தரகர்கள் அட்டூழியம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
இ-சேவை மையத்தில் அம்பலமான மோசடி

சென்னை:சிவகங்கை மாவட்டத்தில் உள்ள, அரசு, இ - சேவை மையத்தில் இருந்து தான், முதன்முதலாக அம்பலமாகியுள்ளது.

அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப் - 4 தேர்வு முடிவுகள் வந்தபோது, பலரும் தங்களுக்கு தெரிந்த, 'பிரவுசிங்' மையங்களுக்கு சென்று, தங்களின் பதிவு எண், தேர்ச்சி பட்டியலில் வந்துள்ளதா என்று பார்த்து உள்ளனர்.

அப்போது, சிவகங்கை மாவட்டம், பெரிய கண்ணனுாரைச் சேர்ந்த திருவராஜ் என்பவர், தான் தேர்ச்சி பெற்றுள்ளதை சரிபார்க்க, அங்குள்ள, இ - சேவை மையத்துக்கு சென்றுள்ளார். அங்கிருந்த ஊழியரிடம், பதிவு எண்ணை காட்டி, கம்ப்யூட்டரில் பார்க்க கூறியுள்ளார்.



சந்தேகம்

அப்போது, அங்கிருந்த தற்காலிக ஊழியர், '46 வயதில், குரூப் - 4 தேர்வு எழுதினீர்களா...' என, ஆச்சரியத்துடன் கேட்டுள்ளார். பின், அவரது எண்ணை, டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தில் பார்த்த, அந்த ஊழியர் அதிர்ச்சி அடைந்து உள்ளார். ஏனென்றால், திருவராஜ் தான், மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றிருந்தார். இதுபற்றி, அவரிடம் விசாரித்து உள்ளார். ஆனால், மழுப்பலாக பதிலளித்து விட்டு, திருவராஜ் சென்று விட்டார்.

அதன் பின், இ - சேவை மைய ஊழியர், அந்த மதிப்பெண் பட்டியலை எடுத்து, குரூப் - 4 தேர்வு எழுதிய நண்பர்களுக்கு அனுப்பி, 'நம் ஊரைச் சேர்ந்தவர் தான், மாநிலத்தில் முதல் இடம் வந்துள்ளார். 'ஆனால், எல்லாருமே நம்ம பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது வியப்பாக உள்ளது' என, சந்தேகம் கிளப்பியிருக்கிறார்.


விஸ்வரூபம்

அதன் பின், அந்த பட்டியல், 'வாட்ஸ் ஆப், பேஸ் புக்' என்று பரவி, இறுதியாக, சில பயிற்சி மையங்களுக்கு கிடைத்துள்ளது. அவர்கள் பட்டியலை பார்த்து, சந்தேகத்தை உறுதி செய்து, ஊடகங்களுக்கு பிரச்னையை எடுத்து சென்றனர். அதன் பின்னரே, டி.என்.பி.எஸ்.சி.,யின் விசாரணை துவங்கி, விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதில், தேர்ச்சி பட்டியலில், முதல், 100 இடம் பிடித்தவர்களிடம், 'எதற்காக ராமேஸ்வரம் மையத்தை தேர்ந்தெடுத்து, தேர்வு எழுதினீர்கள்' என, கேட்கப்பட்டது. அதற்கு, எல்லாரும், 'தாத்தாவுக்கு திதி, பாட்டிக்கு தர்ப்பணம்' என்று, ஒரே பதிலை கூறியது தான், விசாரணையின் போக்கை மாற்றியது.

முதலிடம் பெற்ற திருவராஜ், நிறைய ஆடுகள் வளர்க்கிறார்.தேர்வு நேரத்தில், ராமேஸ்வரத்தில், ஆட்டுக் கிடை அமைக்கப்பட்டு இருந்ததால், அங்கு எழுதியதாக கூறியிருக்கிறார். அவர் தலைமறைவான பின் தான், பிரச்னை மேலும் சூடுபிடித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent