பள்ளிகளில் மாணவர்களை உடல் ரீதியாக தண்டிப்பது ஆசிரியர்களுக்கு தடை செய்யப்பட்டதாகும். இது குழந்தைகளின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். இத்தகைய செயல் தாக்குதலின் ஒரு வடிவமாகக் கருதப்படுவதால், சட்டப்படி தண்டனை வழங்கப்படும்.
பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பதும், மனரீதியாக துன்புறுத்துவதும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாக இருந்தாலும், ஆசிரியர்கள் மாணவர்களை உடல் ரீதியாக தண்டிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பள்ளிகளில் மாணவர்களை உடல் ரீதியாக தண்டிப்பது ஆசிரியர்களுக்கு தடை செய்யப்பட்டதாகும். இது குழந்தைகளின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். இத்தகைய செயல் தாக்குதலின் ஒரு வடிவமாகக் கருதப்படுவதால், சட்டப்படி தண்டனை வழங்கப்படும். இருப்பினும், இந்தியா முழுவதும் சுமார் 60 சதவீத குழந்தைகள் பள்ளிகளில் ஆசிரியர்களால் உடல் ரீதியாக தண்டிக்கப்படுவதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கோவையில் இத்தகைய புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
கருமத்தம்பட்டி அருகே எலச்சிபாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவி தண்டிக்கப்பட்ட சம்பவம், ஆனைமலை அருகே கிழவன்புதூர் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம், சமீபத்தில் ஒரு தனியார் பள்ளியில் அறிவுசார் குறைபாடுடைய மாணவரை ஆசிரியர் தாக்கியதாக கூறி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம், ஆகியவை அதற்கு எடுத்துக்காட்டாகும். இத்தகைய சம்பவங்களுக்கு பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தாலும், மாணவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறைந்ததாக தெரியவில்லை.
ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி அவசியம்
தமிழ்நாடு உளவியல் சங்க மாநில தலைவர் பாலமுருகன் கூறுகையில், “மாணவர்களுக்கு உளவியல் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்படுவது அவசியம் என்றாலும், ஆசிரியர்களுக்கும் உளவியல் சார்ந்த பயிற்சி வழங்கப்படுவது முக்கியம். வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் காரணமாக சில ஆசிரியர்கள் தங்களது கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் மாணவர்களிடம் வெளிப்படுத்தும் சூழல் உருவாகிறது. எனவே, பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு மனவளப் பயிற்சி கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். மனிதவளம் சார்ந்த பயிற்சிகளும் அவசியம். ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், அனைத்து துறையினருக்கும் உளவியல் ஆலோசனை வழங்கப்பட வேண்டும்,” என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக