இந்த வலைப்பதிவில் தேடு

நவீன தமிழகத்தின் சிற்பி! - அவர்தான் #அண்ணா

திங்கள், 16 செப்டம்பர், 2024


1950-60 களில் துணைக்கண்டத்தின் கல்விபெற்றோர் விழுக்காடு முப்பதுக்கும் கீழே.

வர்ணாசிரமத்தின் மேலடுக்கு தாண்டி மிக குறைந்த விழுக்காட்டினரையே கல்வி பற்றிய புரிதல் எட்டியிருந்த நேரம்.

ஆனால், சென்னை மாகாணத்தில் அப்போது ஒரு புதிய இளைஞர் படை உருவாயிருந்தது. அவர்கள் தேநீர் கடைகளிலும், முடிதிருத்தும் நிலையங்களிலும்,

சந்தையின் பக்கங்களிலும் குழுமி இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் முறையான பள்ளிக்கல்வியை பெறாதவர்கள்.

விவசாயமும் இன்னபிற கூலி தொழில்களும் செய்து வருகிறவர்கள்.


அவர்களின் உரையாடல்கள் பகுத்தறிவு பேசுகின்றன. இலக்கியங்களை அவர்கள் தரம் பிரிக்கிறார்கள்.

பெரும் புலவர்களைப்போல் மொழியை கையாள்கிறார்கள். உலகநாடுகளின் அரசியல் வரலாறுகளை, புரட்சிகளை, அதன் பின்னிருந்த சூழல்களைப் பேசுகிறார்கள்.

ஒவ்வொருவரும் கவிஞராக அல்லது பேச்சாளர்களாக இருக்கிறார்கள். ஒரு சிலர் ,பத்திரிக்கையின் ஆசிரியர்களாகவும் இருக்கின்றனர். சிலர் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள்.

நீங்கள் தேனீர் கடையில் அமர்ந்திருக்கிறீர் களா அல்லது ஒரு பல்கலைக்கழகத்தின் விவாத அரங்கில் இருக்கிறீர்களா என்று மலைத்துப் போவீர்கள்.

அத்துணைபேரும் அடிக்கடி மேற்கோள் காட்டுகிற மனிதர் ஒருவர். அந்த இளைஞர்கள், அவரை அரசியல் தலைவராக அல்ல. குடும்பத்தின் மூத்தசகோதரனை பற்றிப் பேசுவதுபோல்

பேசுகிறார்கள். அவர்தான் அண்ணா!! காஞ்சிபுரத்தின் ஒரு எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்து பின்னாளில் தமிழகத்தின் அண்ணனாக மாறிவிட்டிருந்த அண்ணா என்கிற அண்ணாதுரை.

இந்தியா போன்று கல்வியறிவில் பின்தங்கிய, பழமைவாதங்களும் மதநம்பிக்கைகளும், உலகில் எங்குமில்லாத ஜாதி என்கிற அடிமைத்தனமும் வேர் விட்டிருக்கிற நிலத்தில்

ஒரு முற்போக்கான தத்துவத்தை, மக்களின் ஏற்றுக்கொண்ட தத்துவமாக, அரசியல் கொள்கையாக மாற்றியதில் அண்ணாவை போல் வெற்றி பெற்றவர் யாரும் இல்லை என்று சொல்லலாம்.

சுதந்திரத்திற்குபின் துணைக்கண்டம் முழுவதும் காங்கிரசின் இந்திய தேசிய அரசியலுக்கு மாற்றாக, பல்வேறு இன மொழி பண்பாட்டு தனித்தன்மைகளை உடைய மக்களுக்கு நீதி செய்யும்

வகையில், வலிமைவாய்ந்த முற்போக்கு அரசியலே இல்லை என்பதான நிலை. பொதுஉடைமைக் கொள்கையாளர்கள் இப்போதுபோல் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தமுடியாமல் இருந்த

தருணம். பெரியார் சமூக நீதியை,மொழி உரிமையை அரசியல் உரிமையை, காங்கிரஸ் பெற்றுத்தரப் போவதில்லை என்று முடிவெடுத்துவிட்டார். கல்வி, அரசியல், அதிகார உரிமைகள் அனைத்து தரப் பினருக்கும் சென்றடைய வேண்டும் என்ற கொள்கை கொண்டு, எந்த தியாகத்திற் கும் தன்னை உட்படுத்தி கொள்ளத் தயங்காத பெரியா ருக்கு, வாக்கு அரசியலில் நேரடியாக ஈடுபடுவதில் தயக்கம் இருந்தது.

பெரியார் நீதிக்கட்சியை ஆதரித்தார். நீதிக்கட்சி வலிமை இழந்தபோது மாற்று அரசியல் முயற்சிகளை மேற்கொண்டார்.

வேறு வழியில்லாதபோது, தான்எதிர்த்த காங்கிரசில் இருந்தே காமராஜரை ஆதரிக்கிறார். இயக்கஅரசியலில் இருந்துகொண்டு ஆட்சி அதிகாரத்தின் எல்லா ஒடுக்குமுறைகளையும் நெருக்கடிகளையும் தாண்டி போராடிக்கொண்டே இருந்தார். இந்த இடத்தில் தான் பெரியாரிடம் தத்துவார்த்த அரசியலைப் பயின்ற அண்ணா, பெரியாரின் அதே இலக்கிற்கான பயணத்தில்  துணிந்து மாற்றுவழியை கண்டடைகிறார்.

திராவிடம் என்கிற சமத்துவ சமூகநீதிக் கொள்கை, ஒரு குழுவின் குரலாக இருக்கும்வரை அது மக்களுக்கான தேவையை நிறைவு செய்யமுடியாதென்று, தனி இயக்கம் காண்கிறார்.

அது தான் திராவிட முன்னேறக் கழகம். தனக்கான இளைஞர் படையை அவர் கட்டியமைக்கிறார். தனது உரைகள் எழுத்துகள் கலை வடிவங்கள் அனைத்தும் கொண்டு தம்பிகளை  உருவாக்குகிறார். மக்களிடம் போ,மக்களோடு வாழ்ந்திரு,மக்களிடம் கற்றுக்கொள், மக்களை காதலி,மக்கள் பணியாற்று,மக்களோடு திட்டமிடு எனச் சொல்லி அவர்களை தலைவர்கள்  ஆக்குகிறார்.  தன் தம்பிகள் உலகறிவு பெற்றிட வேண்டும் எனும் நோக்கில், தான் படித்த மேற்குலக புதுமைகளை எல்லாம் அழகு தமிழ் கடிதங்களாக்குகிறார்.

தன் தொண்டர்களை அடிமைகளாய் அல்லாமல், அறிவார்ந்தவர்களாய் அந்தக்கடிதங்கள் மூலம் செதுக்கினார். தம்பிகள் தன்னை மிஞ்சியவர்களாக வளர்வது காண்கிறார்.

முரண்பட்டாலும், நம் தலைவர் பெரியார்தான், தான் தலைவர் அல்ல.தளபதி தான் என்பதை உணர்த்துகிறார்.

தந்தை பெரியாருக்கு பக்கத்தில் அண்ணாதுரை அண்ணனான தருணங்களில் ஒன்று அது.

ஒரு பக்கம் புனிதமென்று தமிழர்கள் ஏமாந்து நம்பிக்கொண்டிருந்த அனைத்தையும் ஒன்று விடாமல் உடைத்துப் போட்டுக்கொண்டே இருக்கிறார் பெரியார்.

இன்னோர் பக்கம் பிறப்பிலிருந்து இறப்பு வரை எங்கும் நீக்கமற நிறைந்திருந்தது பிற்போக்குச் சிந்தனைகள். அவற்றிக்கு உள்ளேதான், தங்கள் பண்பாடும், மொழிவரலாறும் சிக்கிக் கிடப்பதாக

தமிழர்கள் எண்ணி இருந்தனர். அதில் ஓரளவு உண்மையும் இருந்தது. சாமான்யர்கள் பெரியாரை வந்தடைய பெரும் தாவலைச் செய்யவேண்டியதிருந்தது.

அந்தத் தாவலைச் செய்யமுடியாத மலைப்பிலே பெரியாரை ஏக்கமாய்ப் பார்த்துவிட்டு ஒதுங்கிப்போய்க் கொண்டிருந்தன எளியோர் உள்ளங்கள்.

எண்ணிப்பாருங்கள். திருக்குறளில் கூட பெண்ணடிமை கருத்துகள் உண்டு என்கிறார் பெரியார். தமிழர்களோ, கம்பராமாயணத் தின் பக்தியில் லயித்துப்போயிருந்தார்கள்.

கட்டுப்பாடுமிக்க தந்தையிடம் விலகி யிருக்கிற சிறு பிள்ளையின் முரண்பாட்டோடு தான் தமிழர்கள், பெரியாரோடு இருந்தார்கள். இருவருக்கும் இணைப்பாக, அண்ணாவும் அவர்  தம்பிமார்களும்தான் தமிழர்களுக்கு அவர்கள் பண்பாடுகளும் மொழி பற்றும் சிதையாதவற்றை மீட்டுக்கொடுத்தனர்.

கம்பராமாயணத்தை தூர ஏறி, சிலப்பதி காரத்தை கையில் எடு என்று அண்ணாவும் அவர் தம்பிகளும் சொன்னதன் காரணம் அது தான்.

ஆரியம் சொல்லும் தீபாவளி தவிர்த்து, பொங்கல் தமிழர் விழாவாக மீட்டெடுக்கப் பட்டது. பிள்ளையாரை உடைப்பதுமில்லை, பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பது மில்லை என்று பகுத்தறிவை சொன்னார். இப்படியே தான், தமிழர்கள் தாங்கள் இழந்துவிட்டதாகக் கருதிய பொன்னுலகக் கனவை மீட்டு, அதை எதிர்கால புத்துலகத்தின் இலக்கின் வழியில் இணைத்துவிட்டவர் அண்ணா.

பிரிவினை கோரிக்கைகள் தடைசெய்யப் பட்டபோது, அண்ணா உறுதி காட்டியிருந் தால், அந்நேரமே குருதி வழிந்தோடும் களமாக தமிழகத்தை மாற்றிவிடும் சூழல் இருந்தது.

எம் கோரிக்கையின் காரணங்கள் அப்படியே இருக்கின்றன. கோரிக்கையை கைவிடுகிறோம் என்று அவர் எடுத்த முடிவு தான், இந்நாளில் ஈழத்துக்கும் தமிழகத்திற்கும் உள்ள வேறுபாடு.

அதுதான் அதிகாரஆவல் உள்ள தலைவனுக்கும், பாசமுள்ள ஒரு அண்ணனுக்கும் உள்ள வேறுபாடு.

அதிகாரத்தின் பிடியை, தனக்கு கீழ்உள்ள தொண்டர் ஒருவர் கையில்கொடுத்து, அவருடைய உத்தரவில் நடக்க ஆவல் கொண்ட தலைவர் வரலாற்றில் யாரும் உண்டா?. அண்ணா செய்தார்.

தம்பி வா, தலைமை ஏற்க வா, ஆணையிடு, அடங்கி நடக்கிறோம் என, தனக்கு அடுத்த நிலையில், தன்னிலும் இளையவரான நாவலர் நெடுஞ்செழியனை அழைத்தபோது, உலகம் கண்டிராத ஒரு உன்னதத் தலைவன் எனத் தமிழகம் அண்ணாவைக் கண்டது.


இந்தியை திணிக்க முயன்ற அன்றைய காங்கிரஸ் அரசு, நீட்டிய துப்பாக்கிகளுக்கும்,  வாட்டிய தீயின் நாக்குகளுக்கும் தங்கள் உயிரை பலியிட்டுக்கொண்டிருந்த தமிழகத்தின் மாணவர்களைப் பார்த்து, ஒரு சகோதரனைப் போல் பதறினார்.

போராட்டத்தை நாங்கள் பார்த்துக்கொள் கிறோம், நீங்கள் உயிர்கொடை செய்வதை நிறுத்துங்கள் என்று மாணவர்களை சமாதானம் செய்து, உயிர்பலிகளை நிறுத்தி போராட்டத்தை கழகத்தின் வாயிலாக முன்னெடுத்தார் அண்ணா.

எந்த பெரியாரோடு முரண்பட்டோரோ, அந்த பெரியாரிடம் தன் தம்பிமார்களோடு தாங்கள் பெற்ற ஆட்சி ஆதிகாரத்தை காணிக்கையாக்கினார்.

இயக்கத்தின் இலக்கு எது, தங்கள் கொள்கைத் தலைவர் யார் என்ற உறுதியை, தம்பிகளோடு தமிழகத்திற்கும் உரக்கச் சொன்ன நாள் அது.

இரண்டாண்டு மட்டுமே ஆட்சியில் இருந்தபோதும், தமிழ்நாடு பெயர்மாற்றம் முதல் சுயமரியாதை திருமண சட்ட அங்கீகாரம் வரை அடுத்துவரும் ஆட்சிகளுக்கு அகலமான பார்வைகளையும்  கொள்கைத் தெளிவையும் கொடுத்துவிட்டுப்போனார்.

இன்றைக்கும் அரசியல் ஆவல் உள்ளோர்களுக்கு, கொள்கையை மக்கள்வயப்படுத்துவது, இயக்கத்தை கட்டமைப்பது, அரசியல்நகர்வுகள் வகுப்பது, ஆட்சி அதிகாரத்தில் தத்துவார்த்த தாக்கத்தை

ஏற்படுத்துவது வரை , பழகிப் படிக்கவேண்டிய பாடமாக, லட்சியமாக அண்ணாவே இருக்கிறார்.

இன்னும் அண்ணாவை பற்றி ஆயிரம் பக்கங்கள் எழுதலாம், சுருக்கமாக சொல்வதென்றால்,  அவர் எடுத்த அரசியலுக்கு எதிர்அரசியல் இன்று வரை தமிழகத்தில் இல்லை.

இன்றும் தமிழகத்தில் தலைவர்களுக்கும் மக்களுக்கும் உள்ள  உறவு முறை அண்ணன் தம்பி, உடன்பிறப்பு, ரத்தத்தின் ரத்தம் என்றே தான் இருக்கிறது.

அவர் கண்மூடிய நாளில் சென்னையில் அவர் இறுதி அஞ்சலிக்கு கூடிய மக்கள் கூட்டம் அவரோடு தமிழர்களுக்கு இருந்த பாசப்பிணைப்பை சொல்லும். கோடி மக்கள் திரண்டு தங்கள்

அண்ணனை வழி அனுப்பி வைத்த தருணம் அது.

அண்ணா – அவர் அரசியல் தலைவர் அல்ல. பாசமுள்ள அண்ணன் !!

அறிஞர் அண்ணாவுக்கு போப்பாண்டவரைச் சந்திக்க ஐந்து நிமிடம் ஒதுக்கப்பட்டது. அஹிம்சா மூர்த்தி காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலமாம் தமிழ் நாட்டின் முதல்வர் நான் என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா.

#போப்பாண்டவர் சொன்னார், அருமையாகப் பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்! தொடர்ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார். அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து உங்களுக்கு என்ன பரிசு வேண்டுமென்றார்.

#என்ன கேட்டாலும் தருவீர்களா என்று கேட்டார் அண்ணா. கேளுங்கள் தருகிறேன் என்றார் போப்பாண்டவர். போர்ச்சுகல் தேசம் இந்தியாவின் கோவாவை ஆக்கிரமித்திருந்தது. போர்ச்சுகலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய மோகன் ரானடே இன்றைக்கும் போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் சிறையில் வாடுகிறார்.

#உலக கிறிஸ்தவர்களின் தலைவரான நீங்கள் போர்ச்சுகலிடம் பேசி மோகன் ரானடேவை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டார் அண்ணா. சரி என்று சொன்னார் போப்பாண்டவர். மகிழ்ச்சியோடு இந்தியா திரும்பினார் அண்ணா.

#போப்பாண்டவரின் வேண்டுகோளை ஏற்று விடுதலை செய்யப்பட்ட ரானடே இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டார். டெல்லி வந்த ரானடேவை வரவேற்க அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி விமானநிலையத்திற்குச் சென்றார். ரானடே அன்னை இந்திரா காந்தியிடம், யாருக்காகப் போராடினேனோ அந்த கோவா மக்களே என்னை மறந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் இருந்து என் விடுதலையை வேண்டிய திரு அண்ணாதுரை எங்கே என்று கேட்டார்.

#அண்ணா மறைந்து விட்டார், அவர் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரனை அழைத்து வந்திருக்கிறேன் என்று சொன்னார் அன்னை இந்திரா.

நாஞ்சிலாரைச் சந்தித்து விட்டு, நீங்கள் மிகவும் நேசிக்கும் கோவாவிற்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று சொன்னார் அன்னை இந்திரா.

#உடைந்து போன ரானடே, நான் முதலில் செல்ல வேண்டிய இடம் கோவா அல்ல, அண்ணாவின் சமாதி தான் என்றார். அன்னை இந்திரா, ரானடே மற்றும் நாஞ்சிலாரை உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

#அண்ணா துயில் கொள்ளும் மெரினாவில் அழுது புரண்டான் ரானடே என்பது தமிழினம் மறந்த வரலாறு. போப்பாண்டவரிடம் தனக்கென எதுவும் கேட்காமல் ஒரு போராளியின் விடுதலை வேண்டிய மனிதநேய மாந்தன் அறிஞர் #அண்ணா.💙

அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அண்ணா செல்கிறார். அப்போது நிருபர்களுடனான கலந்துரையாடலில், அண்ணாவிடம் கேட்கிறார்கள், ‘ஏன் காங்கிரஸ் தோற்றது?’ என்று. அதற்கு சற்றும் யோசிக்காமல், “நீண்ட நாட்கள் பதவியில் இருந்ததால்...” என்று பளிச்சென்று பதில் சொல்கிறார்.

ஆம். அவர்தான் அண்ணா. “எந்த கட்சியும் பத்தாண்டுகளுக்கு மேல் பதவியில் இருக்கக் கூடாது. அதுதான் சரி. பதவியில் இருக்க இருக்க அதிகார போதை ஏறிவிடுகிறது. நான் அதைதான் வேண்டிக் கொள்கிறேன். அதிகார போதை  என் மண்டையில் ஏறாமல் இருக்க வேண்டும்” என்ற நிதர்சனத்தை பேசியவர். இப்போது அதிகார போதை ஏறிய எந்த தலைவருக்காவது  இந்த உண்மையை பேச தைரியம் இருக்கிறதா...?

நாம் அண்ணாவை மட்டும் புதைக்கவில்லை...!
தி.க விலிருந்து பிரிந்து தி.மு.க என்ற புதிய கட்சி தோன்றியபோது பெரியார், “சோம்பேறிகள், செயலற்ற சிறுவர் கூட்டம், உழைக்க தெரியாதவர்கள். திராவிடர் கழகத்தின் கொள்கை அதிகாரத்தைக் கைப்பற்றுவதோ, தேர்தலில் நிற்பதோ கிடையாது. ஆனால், அண்ணாதுரைக்கு அரசியலில் ஈடுபட்டு அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. அதனால் வெளியேறிவிட்டார். அதுதான் உண்மையான காரணம்” என்று குற்றம் சுமத்தினார்.

ஆனால் அதற்கு அண்ணாவின் எதிர்வினை எப்படி இருந்தது தெரியுமா, “இத்தனை ஆண்டுகளிலும் நான் அறிந்த தலைவர், நான் ஏற்றுக் கொண்ட தலைவர் பெரியார். வேறு தலைவரின் தலைமையை நான் எண்ணிக்கூட பார்க்க முடியாது. எனவே, தி.மு.கவிற்குத் தலைவர் என்ற பதவியே வேண்டாம்” என்கிறார்.

ஆம்.  அண்ணா இறுதிவரை அப்படிதான் இருந்தார். 1967 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸை ஆதரித்து, தி.மு.கவையும், அண்ணாவையும் எதிர்த்து பிரச்சாரம் செய்த பெரியாரிடம்தான், அந்த தேர்தலில் 137 இடங்களை வென்று  ஆட்சியைப் பிடித்தபோது தன்னுடன் அமைச்சராக பொறுப்பேற்க இருப்பவர்களுடன் அண்ணா ஆசி வாங்க சென்றார்.

“காமராஜரின் தோல்வியை கொண்டாடாதீர்கள். அது கொண்டாட கூடியதல்ல. காமராஜர் போன்ற தலைவர் தமிழ்நாட்டிற்கு கிடைக்க இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆகும்” என்று சொல்லிய அண்ணாவிடம், இந்த பண்பை தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும். 

நாம் அண்ணாவை மட்டும் புதைக்கவில்லை...!
அதே அண்ணா,  பெரியார் மீது அவதூறு வழக்கும் தொடர்ந்துள்ளார். ஆம். ஜூலை 13, 1949-ல், விடுதலை தலையங்கத்தில் பெரியார் தன்னை கொலை செய்ய சதி செய்தார்கள் என்று அண்ணாவைப் பற்றி குறிப்பிட்டிருந்தபோது, தன் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை போக்க  தம் தலைவர் பெரியாருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் அண்ணா.

காங்கிரஸை தீவிரமாக அரசியல் களத்தில் எதிர்த்துக் கொண்டே, வேலூரில் காந்தி சிலையை திறக்க சென்றவர்.  தாம் 1967-ல் முதன் முறையாக முதல்வராக பொறுப்பேற்றபோது பக்தவச்சலத்திடம், 'நல்லாட்சி செய்ய யோசனை சொல்லுங்கள்' என்றவர், காமராஜரை நேரில் சந்தித்து ஆசி கேட்டுப் பெற்றவர்.  ஆம். எதிர் கட்சி என்பதற்காக அவர்,  அவர்களை இப்போது இருப்பது போல் எதிரி கட்சியாக என்றுமே பார்த்ததில்லை. ஆனால், அவரின் இந்த அரசியல் பண்பு அவரை தலைவராக ஏற்றுக்  கொண்ட எந்த திராவிட கட்சிகளிடமாவது இன்று இருக்கிறதா...?

அது போல் அவர் முதல்வராக பொறுப்பேற்ற பதவி ஏற்பு நிகழ்ச்சியில் தமது குடும்பத்தினருக்கு என்று எந்த சிறப்பு அனுமதி சீட்டும் வழங்க அனுமதிக்கவில்லை. அவரது மனைவியை தவிர,  மற்றவர்கள் பொது மக்களோடு சேர்ந்து நின்றுதான் பதவியேற்பு விழாவை கண்டனர். இதை படிக்கும் போது சமகால திராவிட தலைவர்கள் பங்கு கொள்ளும் நிகழ்ச்சிகள் உங்கள் நினைவிற்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல...

அறுபதுகளில் பாராளுமன்றத்தில், இளம் வயது எம்.பி க்கள் யாரையாவது பார்த்தால், நிச்சயம் அவர்கள் தி.மு.க எம்.பிக்களாகதான் இருப்பார்கள் என்று வட இந்திய தலைவர்கள் சொல்வார்களாம். ஆம். இளைஞர்களை அடையாளம் கண்டு சட்டமன்றம், பாராளுமன்றத்திற்கு அனுப்பியவர் அண்ணா. ஆனால், இன்றைய தலைவர்கள் இப்போதுதான் பேச துவங்கி இருக்கிறார்கள், இளைஞர்களுக்கு பதவி தர வேண்டுமென்று.

நாம் அண்ணாவை மட்டும் புதைக்கவில்லை...!
அண்ணா ஆட்சியில் இருந்தபோது சில மாநிலங்கள் நிதி நிலைமையை காரணம் காட்டி மதுவிலக்கு கொள்கையை கைவிட்டன. ஆனால், அண்ணா தமிழ்நாட்டில் எந்தச் சூழ்நிலையிலும் மதுவிலக்கை தளர்த்தவோ, நீக்கவோ இல்லை. குடிப்பழக்கம் சமூக அமைதியை கெடுத்துவிடும் என்று 1968-ல் மது விலக்கு மாநாட்டை நடத்தியவர் அண்ணா. இப்போதும் உங்களுக்கு ஆட்சி செய்த, ஆட்சியில் இருக்கும் திராவிட கட்சிகள் நினைவிற்கு வந்தால், நான் பொறுப்பல்ல...


1967-ல் அண்ணா தேர்தல் பிரச்சாரத்திற்காக விழுப்புரம் சென்ற போது, இரவு தங்க அரசு விருந்தினர் மாளிகையில் இடமில்லை என்று சொல்லி விட்டனர். அது குறித்து சற்றும் அலட்டிக் கொள்ளாமல் தன் காரிலேயே படுத்து தூங்கியவர்  அண்ணா. இந்த எளிமை இன்றைய எந்த அரசியல் கட்சிகளிடமாவது இருக்கிறதா...?

ஆம். நாம் அண்ணாவை மட்டும் புதைக்கவில்லை. அவருடம் சேர்த்து அனைத்து அரசியல் பண்புகளையும் புதைத்துவிட்டோம்.

பட்டுக்கோட்டை அழகிரி உடல் நலம் குன்றி இருந்த காலகட்டங்களில் அறிஞர் அண்ணா செயற்கரிய செயல் ஒன்றைச் செய்தார், தன்னை யாரேனும் கூட்டங்களுக்கு அழைக்க வேண்டுமேயானால் பட்டுக்கோட்டை அழகிரி பெயருக்கு நூறு ரூபாய் மணியாடர் அனுப்பிவிட்டு அந்த ரசீதை தன்னிடம் கொண்டு வந்து காட்டினால் தான் கூட்டத்திற்கு தேதி கொடுப்பதாகச் சொன்னார், இப்படி பிறன் துயர் தன் துயர் போல எண்ணி துடைக்கின்ற பாங்குதான் அறிஞர் அண்ணாவை தமிழகத்தின் மிகப்பெரிய சிந்தனையாளராகவும் செயல் வீரராகவும் மாற்றியது.

தன்னுடைய செயல்கள் ஒவ்வொன்றும் தமிழ்ச் சமூகத்திற்கு எந்த வகையில் பயனளிக்கிறது என்று எண்ணியபடியே தன் பயணத்தைத் தொடர்ந்தவர் அறிஞர் அண்ணா.

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து நுங்கம்பாக்கம் வீட்டில் தங்கி இருந்த காலகட்டத்தில் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் அண்ணாவை பார்க்கச் செல்கிறார், அண்ணாவின் படுக்கையைச் சுற்றி பத்துப் பன்னிரெண்டு புத்தகங்கள் உள்ளன, அவற்றில் ஒன்றை எடுத்து இதுதானே உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம்? என்று பேராசிரியர் கேட்கிறார், எனக்குப் பிடித்து என்னவாகப் போகிறது இனிதான் நான் படித்ததை என்னால் தொண்டர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாதே? என்று வேதனைப்படுகிறார் அண்ணா. இதுதான் அண்ணா!.

1909 ஆம் ஆண்டு காஞ்சிவரம் நடராசன் அண்ணாதுரையாக பிறந்த அண்ணா, 1934 ஆம் ஆண்டு தந்தை பெரியாரை நேரடியாக சந்திக்கிறார். அப்போது அவருக்கு வயது 25. 1938 முதல் தந்தை பெரியாரோடு இணைந்து பயணிக்கிறார். பத்தாண்டுகள் கழித்து 1949ல் திமுகவை தொடங்குகிறார் அப்போது அண்ணாவின் வயது 40.

அடுத்த இருபது ஆண்டுகள் அரசியல் களத்தில் பயணித்த அண்ணா முதலமைச்சர் என்ற மிகப்பெரிய உயரத்தை எட்டி 60 வயதில் மரித்துப் போனார். 30 ஆண்டுகள் கல்வி, 10 ஆண்டுகள் சமூகப்பணி, இருபது ஆண்டுகள் அரசியல் களம் என எளிதாக அண்ணாவை வரையறை செய்யலாம்.

தீராத அறிவுத்தேடலோடு இணையற்ற சமூக சிந்தனையோடு உயர்வான அரசியலை தமிழ் பெரு நிலத்திற்குள் முன்னெடுத்த தகையாளர் அறிஞர் அண்ணா.

வேறு எந்த தலைவரும் முன்னெடுக்காத வகையில் இளையவர்களை அரசியல் படுத்தி அதிகார அடுக்குகளை நோக்கி பெரிய அளவில் நகர்த்தியவர் அண்ணா.

தன்னையொத்த தன்மையிலேயே தன் தம்பிகளையும் வார்த்தார். படிக்க சொல்லித் தந்தார், எழுத களம் அமைத்துக் கொடுத்தார், பேச மேடைகளை எழுப்பினார், பிறகு அதிகாரத்தில் உட்கார வைத்தார். பெற்ற அறிவையும் கைக்கெட்டிய அதிகாரத்தையும் ஏழை எளியோருக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சொல்லி மறைந்தவர் அண்ணா.

1957 ஆம் ஆண்டு திருச்சியில் திமுகவின் மிகப் பெரிய மாநாடு நடக்கிறது, அந்த மாநாட்டிற்கு அன்பில் அழைக்கிறார் என்று தன் தம்பிகளில் ஒருவரை முன்னிலைப்படுத்தி அழைப்பு விடுத்தவர் அண்ணா.
கொள்கைகளை மக்கள் ஏற்றுக்கொள்வார்களேயானால் சட்டப்பேரவைக்குள் வர வேண்டியதுதானே என்று காமராசர் திமுகவிற்கு சவால் விடுத்தார், அவரது சவாலை ஏற்று 1957ஆம் ஆண்டு நடந்த திமுக மாநாட்டில் தொண்டர்களிடம் தேர்தலில் போட்டியிடலாமா? என கருத்து கேட்க பெட்டிகளை வைத்தார் அண்ணா,

தொண்டர் தம் எண்ணத்திற்கு ஏற்ப 1962 ஆம் ஆண்டு தேர்தலில் வென்று 15 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவைக்குள் நுழைந்தனர்.

பாவேந்தர் பாரதிதாசன் அண்ணாவை கடுமையாக விமர்சிப்பதாக அவரிடம் கூறிய பொழுது, கவிஞர்களே எப்பொழுதும் அப்படித்தான், கோபம் வந்தால் பேசத்தானே செய்வார்கள்! நம்மை மட்டுமா பேசுகின்றார்கள்? என்று எண்ணிக் கொள்ளவேண்டியதுதான் என்றாராம் அண்ணா.

ஒரு முறை பாவேந்தர் பாரதிதாசனுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டி அண்ணா அளித்தார், அப்போது பணத்தை ஒரு தட்டில் வைத்து அதை அண்ணா நீட்ட பாவேந்தரை எடுத்துக் கொள்ளச் சொன்னார். இப்படி ஒரு மனிதனின் தேவையறிந்து உதவுகின்ற பாங்கும் பண்பறிந்து விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பாங்கும் ஒருங்கே பெற்றவர் அண்ணா.



அண்ணா எழுதிய ஓரிரவு நாடகத்தை திருச்சியில் வைத்துப் பார்க்கிறார் கல்கி, இதோ ஒரு பெர்னாட்சா தமிழ்நாட்டில் இருக்கிறார் என மனம் திறந்து அண்ணாவை பாராட்டினார்.

பெரியார் உங்களை கடுமையாக திட்டுகிறார் என்று அண்ணாவிடம் சொன்னார்கள், பெரியார் என்னை எவ்வளவோ பாராட்டி இருக்கின்றார். இப்போது திட்டுவதை பழைய பாராட்டுகளில் இருந்து கழித்துப் பார்த்தால் கூட பாராட்டுகளே மிஞ்சி நிற்கும் என்று பதில் சொன்னவர் அண்ணா.

லட்சக்கணக்கான இளைஞர்களின் மனதில் நம்பிக்கையை விதைத்து, சாதி மத பேதங்களை கடந்து அவர்களை ஒரு தத்துவத்தின் குடையின் கீழ் ஒருங்கிணைத்து, அரசியல் களத்தில் வெற்றி பெறச் செய்து அதிகார நிழலில் அமரவைத்து ஒரு தலைமுறையையே செழுமைப் படுத்தியவர் அண்ணா.

ஜனநாயக நாட்டில் அதிகாரத்தை எளியவர்களும் அடைவதற்கான நவீன அரசியல் இயக்கம் கண்டவர் அண்ணா.

அமைப்பு ரீதியாகவும் தத்துவார்த்த ரீதியாகவும் தன் காலத்திற்குப் பிறகும் கூட வலிமையாக இருக்கும்படியான ஒரு அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு ஒரு தலைவனுக்கு மிக நவீனமான பார்வை வேண்டும், அது அண்ணாவிடம் நிறையவே இருந்தது. நவீன தமிழகத்தின் சிற்பி என்று அண்ணாவை சொல்லலாம்

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

பழமை புதுமை


பழமை புதுமை என்ற இரு சக்திகளுக்கும் போர் நடக்கிறது. எழுத்தாளர்களின் பேனா முனைகளே அப்போரில் உபயோகமாகும் கருவிகள். (எழுத்தாளர் மாநாடு 26.11.1944)

எழுத்தாளர்கள்


எழுதுவது குழந்தை பிறப்பது போல்! கருவுறுவது போன்றது எண்ணம்! கருவுக்கு ஆண் - பெண் இருத்தல் போல எண்ணமும் பிறக்க காலமும் நோக்கமும் கூடவேண்டும். பிறகே எழுத்து! எழுத்தாளர் என்றால் இந்த இலட்சிய புருசனாக இருக்க வேண்டும்! (எழுத்தாளர் மாநாடு, திராவிட நாடு - 26,11,1944)

சட்டம்


சட்டம் ஓர் இருட்டறை! அதில் வக்கீலின் வாதம் ஓர் விளக்கு! அந்த விளக்கு ஏழைகளுக்கு கிடைப்பதில்லை! (வேலைக்காரி - நாடகம் - 1945)


பெண்


நிலவுக்கென்று தனி ஒளி இல்லை அதுபோலவே பெண்களுக்கென்று தனி வாழ்வில்லை அண்ணன், தம்பி, அப்பா, கணவன், மகன், பேரன் என்று இப்படித்தான் இரவல் வெளிச்சத்தில் வாழவேண்டியிருக்கிறது!

(ரங்கோன் ராதா - புதினம் - 1945)


ஆணிடம் சிக்கியப் பெண்


பல்லியிடம் சிக்கிக் கொண்ட பூச்சியப் பார்த்திருக்கிறேன். உடலில் ஒரு பாகம் பல்லியின் வாயில் சிக்கிவிடும். பூச்சிக்கு அது தெரிந்துவிடும். மரணத்தின் பிடியில் இருப்பதுதான் தெரியுமே தவிர அதிலிருந்து மீண்டு கொள்ளும் வலிவு இராது. அந்த நிலையில் தன்னால் தப்பித்துக் கொள்ள முடியுமா? அதற்கு தகுந்த சக்தி இருக்கிறதா இல்லையா என்பது பற்றி எண்ணிக் கொண்டிருக்க முடியும்? எப்படியாவது வாயின் பிடியிலிருந்து விடுபடவேண்டும் என்பதற்காக துடிக்கும், நெளியும். தலையை தூக்கும் பல்லியன் வாயிலிருந்து வெளிப்படுவதற்காக தன்பலத்தை முழுவதும் உபயோகித்துப் பார்க்கும். உவ்வொரு துடிப்பும் பூச்சியின் வலிமையை நாசமாக்கவும், உயிரை போக்கவும் பயன்படுமே ஒழிய விடுதலைக்கு வழியாக முடியாது, பல்லிக்குபூச்சியைக் கொல்லும் வேலையும் மிச்சமாகும். தன் பிடியை இறுக்கிக் கொண்டு பல்லி அசைவு அற்று இருக்க வேண்டியதுதான். பூச்சி போராடுவதாக கருதிக் கொண்டு சுவரிலே மோதுண்டு தானகச் சாகும். பிறகு பல்லி அதனைத் தின்றுவிடும். அது போன்ற நிலையில் நான் இருந்தேன். (சங்கோன் ராதாவில் - 1945)

பெண்


வெங்காயம் காய்கறிகளுடன் சேர்க்க சுவையான்ன பயன் தரும் உணவாகிறது. வெங்காயத்தை நறுக்கும் போதோ நம் கண்களிலிருந்து நீரைக் கொண்டு வருகிறது. எரிக்கிறது. பெண்ணும் அப்படித்தான்! அன்புடன் நடத்தினால் இனியவளாகிறாள். சிறிது சின உணர்வை தூண்டிவிட்டாலோ எழுப்பிவிட்டாலோ ஆணை எரித்தே அழிக்கிறாள். ஆண் அழுதுதான் தீர வேண்டும். ( ரங்கோன் ராதா - 1945)

» பணக்காரன் குளம் குட்டைக்குச் சமமானவன். முதலாளி ஊற்றுக்கு சமமானவன். மழை பெய்தால்தான் குளம் குட்டைகளில் நீர் இருக்கும். இன்றேல் வறண்டு விடும். ஆனால் ஊற்றோ என்றும் நீர் சுரந்துகொண்டே இருக்கும் இத்தகைய பேதம் இருக்கிறது பணக்காரனுக்கும், முதலாளிக்கும்.


(பணத்தோட்டம் - 1946)



புத்தறிவு


ரயிலேறி ராமேசுவரம் போவதும் ரோட்டரிவிஷினில் ரமணர் நூல் அச்சாவதும் ரேடியோவில் சங்கராச்சாரி பேசுவதும் காமிரா கொண்டு கருட சேவையை படம் பிடிப்பதும் டெலிபோன் மூலம் தெப்ப உற்சவ நேரத்தை விசாரிப்பதும் இவை போன்றவை இங்கு நித்ய நிகழ்ச்சிகள் அல்லவா? இது சரியா? பல்துலக்கப் பயன்படும் பசை பாத்திரம் துலக்க பயன்படுத்தனால், கல் உடைக்கும் கருவியைக் கொண்டு கனியைத் தாக்கினால், புலி வேட்டைக்குறிய துப்பாகியைக் கொண்டு எலியைக் கொல்லக் கிளம்பினால் என்ன எண்ணுவர்? என்ன கூறுவர்? அது போல புத்தறிவு தரும் சாதனங்களைக் கொண்டு பழைய வாழ்க்கையை நடத்த முற்படுபவர்களைப் பற்றி என்ன எண்ணுவது? என்ன கூறுவது?

(ரயிலேறி - திராவிட நாடு - 21.12.1947)

பண்பாளன்


எருமைகன் சேற்றில் புரளும் அதனைக் கண்டும் ஆறறிவினர் அருவியில்தான் நீராடுகின்றனர். கழுகு அழுகிய பிணத்தை கொத்தித்தின்கிறது. கிளி கொவ்வை கனியைதான் விரும்புகிறது. புளித்த காடியை பருகுவான் குடிகாரன். செவ்விளநீர் தேடுகிறான் பண்பாளன். எவர் எத்தகைய மொழி பேசிடினும் தம்பி நீ கானம் பாடிடும் வானம்பாடியாகவே இருந்திடல் வேண்டும். (17.07.66)

ஓட்டுரிமை


உலைக் கூடத்தான் அமைத்து தருவது வாள் ஆயின் அந்த வாள் அவன் தலை கொய்திடும் வலிவு பெறுகிறதல்லவா. மனிதன் குளம் வெட்டுகிறான். இடறி விழுந்தால் உயிரையே குடிக்கிறதல்லவா! தேன் பருகுகின்றோம் சில துளி உடலில் இருப்பின் எறும்பு மொய்த்து கடிக்கிறதல்லவா? அது போலவே தனிமனிதனின் ஓட்டுரிமையால் அமைக்கப்படும் அரசும், பயனுணர்ந்து செயலாற்றும் திறமையற்றவர்களிடம் சிக்கிவிட்டால், உயிர்காக்கவேண்டிய அரசு உயிர் கொல்லும் அரசாக நாட்டையே நடுங்கச் செய்கிறது.


(அகமும் புறமும் - 14.01.1966)

பெரிய மனிதர் - சிறிய குணம்


குற்றாலம் சென்று குழாயடியில் குளிப்பதுபோல், திருக்குளத்தில் இறங்கி பாசியை எடுத்து வருவதுபோல், சந்தனத்தை கரைத்து மாட்டுத் தொழுவத்தில் தெளிப்பதுபோல், கரும்பை கொண்டு வந்து அடுப்பெரிப்பது போல், இசைப்புலமை பெற்ற பிறகு கோட்டான் போல் கூவிட முனைவதுபோல், யானை மீது அம்பாரி அமைத்து அமர்ந்து பூனை பிடிக்க செல்வதுபோல், உடைவாளை வீசி உருளை கிழங்கை வெட்டுவதுபோல், பூந்தோட்டம் சென்று ஊமத்தும் பூ கேட்டதுபோல், கழநியை உழுதுவிட்டு கள்ளிச் செடியை நடுவதுபோல், சாமியார் ஆகிவிட்டு மாமியார் வீட்டுக்குச் சாப்பிடச் செல்வதுபோல், இளநீர் பருகிட மறுத்து கழுநீர் குடிக்க துடிப்பதுபோல், தங்கத் தாம்பாளத்தில் தவிடு கொட்டி வைப்பதுபோல் பெரும் பதவியில் அமர்ந்திருக்கும் பெருந்தலைவர் இழிமொழி பேசுவது.

(மரண அடி கொடுப்பாராம் - காஞ்சி - 25.09.1966)


அரசியல்


ரசம் கலையாத கண்ணாடி முன் நின்று பார்த்தால்தான் முகம் சரியாகத் தெரியும். ஜனநாயகப் பண்பு கெடாத நிலை, ஆளுங்கட்சிக்கு இருந்தால் தான் எதிர்க் கட்சியின் தரம் தெரியும்.

(விழாவும் விளக்கமும - 28.04.1957)



ஊழல்


பாலை பூனை குடித்துவிட்டது என்ன செய்வது? இது தெரியாமல் குழந்தை அழுகிறதே, கொஞ்சம்கூட புத்தியில்லாமல் என்று கூறிக்கொண்டே குழந்தையை முதுகில் அறைந்து விட்டு, அது வீறிட்டு அழ ஆரம்பித்ததும், பாலை குடித்த பூனை மியாவ் மியாவ் என்று கத்துவதை காட்டி, பாப்பா அழாதே! அதோ, கேள் பூனை பாடுகிறது! அதை கேட்டுக் கொண்டே தூங்கு! கண்ணல்ல தூங்கம்மா, தூங்கு என்று தாய் பேசினால் எப்படி இருக்கும்! அப்படி இருக்கிறது ஒவ்வொரு ஊழலைப் பற்றியும், சர்க்காரை நடத்துகிறவர்கள் சமாதானம் சொல்லும் போக்கு.

(கைராட்டை காவேரி - திராவிடநாடு - 02.04.1961)



பேதை


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு வள்ளுவர் கூறியுள்ளார்! கூறி? ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று இந்நாளில் பாதியார் கூறி காட்டவேண்டியதாயிற்று! அதற்குப் பிறகும் ஜாதிப்பிடிப்பும் பித்தமும் நீங்கியபாடில்லையே! பேழையில் பொருளை அடைத்து பேதையொருவன் அதன் மீதே பட்டினி கிடந்த நிலையில் சாய்ந்திருக்கிறான், என்றால் அப்படி ஒரு கதை சொன்னால் வியப்படைகிறோம். அறிவுப் பேழை இங்கு - ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு! எனினும் பேதம், பிளவு, மதியற்ற போக்கு, குருட்டு பிடிவாதம், முரட்டுவாதம், சே! தம்பி இதனை எண்ணும்போது உள்ளபடியே வெட்கம் விலாவினை குத்திடுகிறது.

(காஞ்சி - 14.01.1965)



பணம் ஒரு சிலரிடம் போய் குவிந்து கொள்வதற்கான வழியை அமைத்துக் கொடுத்துவிட்டு சோஷலிசம் பேசுவது கன்றுக் குட்டி இறந்த பிறகு, வைக்கோலால் செய்த உருவத்தின் மீது, அதன் தோலைப் போர்த்தி வைத்து, அதைக் காட்டி பசுவை ஏய்த்து, பால் கறந்திடும் தந்திரம் போன்றதாகும்.

(தம்பி - அனுபவி ராசா - 21.08.1966)



அலை எப்போதும் ஓய்வதில்லை. கடல் அலைகள் என்றும் இருந்துகொண்டே இருப்பதுபோல தி.மு.கழகத்தின் உணர்ச்சியும் நாட்டிலே ஓயாது பரவிக்கொண்டே இருக்கும்.




தி.மு.கழகத்தில் ஓட்டை விழுந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இது நாயனத்தில் விழுந்துள்ள ஓட்டை. எந்த ஓட்டையை அடைத்துக்கொண்டு எந்த ஓட்டையை திறந்துவிட்டால் சங்கீதம் வருமென்று எனக்குத் தெரியும்.



சேலம் ஒகேனக்கல் அருகே, ஆடு தாண்டும் அளவுள்ள காவேரி, பிறகு அகண்ட காவேரியாகிறதே, வேறு ஜில்லாவில் அது போல் இடபேதம் இயல்பு பேதத்துக்குள்ள பல காரணங்களில் ஒன்று ஒரு இடத்தில் கோபத்தை காட்ட முடிவதில்லை. ஆனால் கோபமே ஏற்படவில்லை என்று பொருளில்லை. அது பிறகு கொதித்துக் கிளம்புகிறது வேறோரிடத்தில்.

(சாது - 1947 - சிறுகதை)


பூசை அறைக்குள்ளே இருப்பதாலேயே புலி சாதுவாகவா மாறிவிடும்? கதராடை அணிந்து கொண்டதாலேயே காதகர்கள் இரட்சகர்களாகவா மாறிவிடுகிறார்கள்? தங்கப் பூண் போட்டத் தடியால் தலையில் அடித்தால் வலி எடுக்காமல் மகிழ்ச்சியா பிறக்கும்? வாழ்வை அழிப்பதைத் தொழிலாகக் கொண்டவர்கள் வந்தேமாதரம் பாடிவிட்டால் கொடுமைகளை மறந்துவிடவா முடியும்? (குன்றின் மேலிட்ட விளக்கு - 06.08.1961)




வைரத்திலுள்ள ஒளியிலே, சிலப்பகுதியை வேறாகப் பிரித்து எடுத்துச் செல்லமுடிகிறதா - பட்டை தீட்டி ஒளியேற்றியவன் வைரத்தை விட்டுவிட்டுச் செல்வானாகில் நான் பட்டை தீட்டியதால் கிடைத்த ஒளியை என்னுடன் எடுத்துச் செல்வேன் என்றா கூறமுடியும்? அது போலத்தான் கூட்டு முயற்சியின் விளைவாக ஏற்படும் எழுச்சியிலிருந்து எந்த ஒரு அளவையும், எவரும் தனியாக்கி எடுத்துச் செல்ல முடியாது.


(இந்தியர் ஆகின்றனர் - 28.05.1961)



எஃகு தயாரிக்க வேண்டிய முயற்சி மிகப் பெரியது. இரும்பைக் காய்ச்சி ஊட்டமும் அழுத்தமும் ஏற்றி எஃகு தயாரிக்கப்படுகிறது. பின்னர் அந்த எஃகு எதையும் தாங்கும் ஆற்றலும் வலிமையும் பெறுகிறதா. வளைவதில்லை; முறிவதில்லை. அது போலவே தம்பிகள் எதையும் தாங்கும் இதயமுடைய எஃகு கம்பிகளாக உருவாகவேண்டும்; விளங்கவேண்டும்.


(எண்ணப் பிணைப்பு இதயக் கூட்டு! வண்ணக்கலவை! - 19.03.1961)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent