பணி நிரந்தரம் கோரி ஒன்பதாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்துவரும் 12,000 பகுதிநேர ஆசிரியர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் வேண்டுமென கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. மேலும் 2021 ஆம் ஆண்டு திமுக தேர்தல் வாக்குறுதி எண் 181-இல் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.மேலும் எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் திமுகவின் தேர்தல் வாக்குறுதி 181-ஐ நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அனைத்து பகுதிநேர ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் அறிவித்தனர். அதனடிப்படையில் ஜூலை 8 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்று பின்னர் விடுவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று 9 வது நாளாக பள்ளி கல்வித்துறை இயக்குநர் அலுவலகம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பியபோது இறந்த ஆசிரியருக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக