இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் ஊதியம் - ஐகோர்ட் அதிருப்தி

வெள்ளி, 26 ஜூலை, 2024

 




தமிழகத்தில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் சம்பள நிர்ணயம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.


மதுரையைச் சேர்ந்த கண்ணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பிலும், ஒருங்கிணைந்த ஊதியம் நிர்ணயிப்பதிலும் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. 


இதனால் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு ஊதிய விவகாரம் தொடர்பாக 2010-ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் அல்லாத ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் தூய்மைப் பணியாளர் ஆகியோருக்கு மாத ஊதியம் ரூ.6 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


எனவே, அரசு மாதிரிப் பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு சமமான ஊதியம் வழங்கக்கோரி கடந்த 2020-ம் ஆண்டில் மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தொகுப்பூதியத்தில் மனுதாரர் தேர்வாகி உள்ளதால் 2010-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை பொருந்தாது என உத்தரவிட்டார். அதை ரத்து செய்து எனது பணியை வரன்முறைப்படுத்தவும், உரிய ஊதியம் வழங்கவும் உத்தரவிட வேண்டும்’ எனக் கோரி இருந்தார்.


இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “சாதாரண தினக்கூலி பணியாளர்களுக்கு அரசு ரூ.600 ஊதியம் நிர்ணயம் செய்துள்ளது. அப்படியிருக்கும் போது மாதச் சம்பளமாக ரூ.6 ஆயிரம் என எப்படி நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது? தற்போதைய விலைவாசி சூழலில், மக்கள் குறித்து யோசிக்க மாட்டீர்களா?


ரூ.6 ஆயிரத்தில் எப்படி குடும்பம் நடத்த முடியும்? ஒரு நாளைக்கு ரூ.200 போதுமா? இதுபோன்ற அரசாணைகள் எப்படி பிறப்பிக்கப்படுகின்றன? இதுபோன்ற விவகாரங்களில் கவனமாக செயல்பட வேண்டும். இது தொடர்பாக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” எனக்கூறி விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent