ஒரே ஆசிரியர் பல கல்லுாரிகளில் பணியாற்றுவதை தடுக்கும் வகையில், ஆசிரியரின் ஆதார் உள்ளிட்ட விபரங்களை, இணையதளத்தில் பதிவேற்றும்படி, உயர்கல்வித் துறை செயலர் சமயமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, தமிழக கல்லுாரி கல்வி இயக்குநர் சுந்தரவல்லிக்கு, அவர் அனுப்பிஉள்ள கடிதம்:
தமிழகத்தில் உள்ள சுயநிதி கல்லுாரி முதல்வர்கள், தங்களிடம் பணிபுரியும் ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியலை, பல்கலைகளுக்கு தனித்தனியாக சமர்ப்பித்து, இணைவு பெறுகின்றனர்.
இந்நிலையில், ஒரே ஆசிரியர், ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் பணியாற்றும் விபரங்களை அறிய முடியவில்லை. இந்த முறைகேடு தெரியவரும்போது, கல்லுாரி இணைப்பை பல்கலை ரத்து செய்கிறது.
இதைத் தவிர்க்க, பல்கலைகள் தங்களின் இணைப்புக் கல்லுாரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் விபரங்களை, ஆதாருடன் இணைக்கும்படி, கல்லுாரி முதல்வருக்கு அறிவுறுத்த வேண்டும்.
அதை உறுதி செய்த பின், அண்ணா பல்கலையிடம் இருந்து மென்பொருளைப் பெற்று, அதன் வாயிலாக அனைத்து ஆசிரியர்களின் விபரங்களையும், ஆதாருடன் பல்கலைகளின் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
அவ்வாறு செய்யாத கல்லுாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக