'தேர்தல் வாக்குறுதியில் உறுதியளித்தபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; அதற்கு முன் மே மாதம் சம்பளம், போனஸ், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும்' என பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மதுரையில் தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:
தமிழகத்தில் 2012 ல் சமக்ர சிக் ஷா என்ற திட்டத்தில் ரூ.5 ஆயிரம் சம்பளத்தில் ஓவியம், கணினி, உடற்கல்வி என 16 ஆயிரம் பேர் பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். தற்போது இவர்களுக்கு ரூ.12 ஆயிரத்து 500 சம்பளம் வழங்கப்படுகிறது. இத்தொகையும் 2 முறையாக வழங்கப்படுகிறது. இது வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இல்லை.
அதேநேரம் இதே பாடங்களில் சிறப்பாசிரியர்களாக காலமுறை சம்பளத்தில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கல்வித் தகுதியும், பள்ளிப் பணியும் ஒரே வகை தான். ஆனால் இதில் 'சமவேலைக்கு சம ஊதியம்' என்ற நிலைப்பாடு மீறப்பட்டுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் பெரும்பாலும் 50 வயதை கடந்து விட்டனர்.
கணவனை இழந்தவர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் 50 சதவீதம் பேர் உள்ளனர். நீண்டகால தொகுப்பூதியம் பெறும் இவர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்கி, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
அதுவரை 13 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள மே மாத சம்பளம், போனஸ், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக