இந்த வலைப்பதிவில் தேடு

ஆடி அமாவாசை: வீடுகளில் விரதம், வழிபாட்டு முறை எப்படி?

திங்கள், 20 ஜூலை, 2020

அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக் கூடாது, பகலில் சாப்பிடலாம். இரவில் பால், பழம், சிற்றுண்டிகள் சாப்பிடலாம்.




ஆடி அமாவாசை இந்த ஆண்டு ஜூலை 20-ம் தேதி (நாளை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்குவதை பலரும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தவிர, அமாவாசை விரதம் இருப்பதையும் முக்கியமாக கருதுகிறார்கள். அமாவாசை விரதம் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.


அமாவாசை விரதம் என்பது, நமது முன்னோர்களை வேண்டி வணங்கும் விரதம். காலையில் எழுந்து, அருகில் இருக்கும் ஆற்றிலோ, குளத்திலோ குளித்து விட்டு இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். முறைப்படி தர்ப்பணம் செய்து வைக்கும் அந்தணர்கள், ஆற்றின் கரையோரங்களில், கடற்கரையோரங்களில் இருக்கலாம். அவர்கள் மூலம் தர்ப்பணம் செய்யலாம். அதன்பின்னர், முதியவர்கள் மற்றும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும்.


ஆடி அமாவாசை தர்ப்பணம் விரதம்

வீட்டில் பெண்கள் குளித்து காலை உணவு உண்ணாமல், இறந்த முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் தயார் செய்வார்கள். அன்றைய சமையலில் அனைத்து விதமான காய்கறிகளும் இடம் பெற வேண்டும். பின் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ, அத்தனை இலைகள் போட்டு, சமைத்த எல்லா உணவுகளையும், பதார்த்தங்களையும் படைத்து, முன்னோர்களுக்கும் படைப்பவர்களுக்கும் துணிகளை வைத்து, அகல் விளக்கேற்றி தீபம் காட்டி வழிபட வேண்டும். அதன் பிறகு படைத்த எல்லா உணவு, பதார்த்தங்களையும் தனித் தனியாக இலையோடு எடுத்து, வீட்டிற்கு வெளியில் உயரமான இடத்தில் வைக்க வேண்டும்.


முன்னோர்களுக்குப் படைத்து வைப்பவைகளை, காகங்கள் மட்டுமே உண்ண வேண்டும் என்பதால்தான் உயரமான இடங்களில் வைக்கச் சொல்கிறார்கள். காகங்கள் உண்ட பிறகு, வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவு முறைகளுக்கேற்ப உள்ளவர்கள் அமர்ந்து சாப்பிட வேண்டும்.


அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக் கூடாது, பகலில் சாப்பிடலாம். இரவில் பால், பழம் அல்லது சிற்றுண்டிகள் ஏதாவது சாப்பிடலாம். முறைப்படி அமாவாசை விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம். தமிழகத்தில் வெகு பரவலாக இது பின்பற்றப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent