இந்த வலைப்பதிவில் தேடு

தீர்மானம் கொண்டு வந்த முதல்வர்; பாதியில் வெளியேறிய ஆளுநர்: சட்டப்பேரவையில் பரபரப்பு

திங்கள், 9 ஜனவரி, 2023

 



அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்று பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியபோது ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார்.


சட்டப்பேரவையில் வழக்கமாக ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அந்த வகையில், இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்று (ஜன.9) காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. காலை 10 மணிக்கு கூட்ட அரங்கில் ஆளுநர் தனது உரையை வாசிக்க தொடங்கினார். இதன்படி காலை.10.50 மணி வரை ஆளுநர் தனது உரையை வாசித்தார். உரையை வாசித்து முடிக்கப்பட்டதும், அதன் தமிழாக்கத்தை பேரவைத்தலைவர் மு.அப்பாவு வாசித்தார்.


இதன்பிறகு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்று பேரவையில் குற்றச்சாட்டினார். அவர் பேசுகையில்,"தமிழக அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை. உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப்படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது" என்று தெரிவித்தார். 


ஆளுநர் தனது உரையை வாசிக்க தொடங்கினார்.


உரையைத் தொடங்கியவுடன் "தமிழக சகோதர - சகோதரிகளுக்கு வணக்கம்" என்று ஆளுநர் தமிழில் தெரிவித்தார். மேலும் முதல்வர், சட்டமன்ற உறுப்பினர்கள் என்று அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் என்று தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்நிலையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதன்படி காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன.


இந்நிலையில் 'திராவிட மாடல்', 'தமிழ்நாடு' போன்ற வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்து விட்டதாக திமுக கூட்டணி கட்சிகள் குற்றஞ் சாட்டியுள்ளனர். இது குறித்து காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில்,”ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் உரையை படித்துக் கொண்டு உள்ளார். தமிழகத்தின் மாண்பு, தமிழகத்தின் மரபு எல்லாம் தமிழக அரசு எழுதிக் கொடுக்கின்ற உரையை படிக்க வேண்டும். ஆனால் ஆளுநர் விட்டுவிட்டு படிக்கிறார்.


தமிழ்நாடு என்று வரும் போது தமிழ்நாடு என்று சொல்லவில்லை. திராவிட மாடல் என்று வரும் போது திராவிட மாடல் என்று சொல்லவில்லை. இவ்வாறு விட்டு விட்டு படிக்கிறார். இது தான் ஆளுநரின் போக்கு. ஆளுநரின் சர்வாதிகாரம். ஆளுநரின் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம். ஆளுநர் மரபை மீறி, அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி, ஜனநாயகப் படுகொலையை வரலாற்று சிறப்பு மிக்க சட்டப்பேரவையில் செய்து கொண்டுள்ளார்." என்று கூறினார்.


இது தொடர்பாக முதல்வர் பேசிக் கொண்டு இருக்கும் போது ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியில் வெளியேறினார். இதனால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது. ஆளுநர் உரையுடனான சட்டப்பேரவை ஆண்டு முதல் நாள் கூட்டமானது தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு ஆரம்பித்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிறைபெறுவதே மரபு. இந்நிலையிலை ஆளுநர் தேசியகீதம் இசைக்கப்படுவதற்கு முன்னதாக நிறைவு பெற்றதற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent