இந்த வலைப்பதிவில் தேடு

உதவிப் பேராசிரியர் பணிக்கான ‘செட்' தேர்வு கட்டணத்தை குறைக்க பட்டதாரிகள் வலியுறுத்தல்

திங்கள், 25 மார்ச், 2024

 



தமிழகத்தில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர 'நெட்' அல்லது 'செட்' தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


2024-ம் ஆண்டு முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் 'செட்' தேர்வு நடத்தும் பொறுப்பு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு செட் தேர்வுக்கான அறிவிப்பை சுந்தரனார் பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்டது.


தமிழ், கணிதம் உள்ளிட்ட 43 பாடங்களுக்கான செட் தேர்வு ஜுன் 3-ம் தேதி கணினி வழியில் நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடைகிறது. 


தேர்வுக் கட்டணம் பொதுப் பிரிவுக்கு ரூ.2,500, பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினருக்கு ரூ.2,000, எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.800-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 3-ம் பாலினத்தனவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை. இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.msutnset.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், செட் தேர்வுக்குரிய கட்டணத்தைக் குறைக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுகுறித்து பட்டதாரிகள் சிலர் கூறும்போது, ‘‘கடைசியாக 2018-ல் தமிழகத்தில் செட் தேர்வு நடத்தப்பட்டது. 


அப்போது தேர்வுக் கட்டணம் பொதுப்பிரிவுக்கு ரூ.1,500, பிசி, எம்பிசி பிரிவுக்கு ரூ.1,250, எஸ்.சி.,எஸ்.டி. மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.500 என்ற அளவில்தான் இருந்தது.


ஆனால், தற்போது தேர்வுக் கட்டணம் ரூ.300 முதல் ரூ.1,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய அளவில் நடத்தப்படும் யுஜிசி நெட் தேர்வில்கூட அதிகபட்சமாக ரூ.1,150 தான் கட்டணமாக உள்ளது. அதைவிட 2 மடங்கு கூடுதலாக வசூலிப்பது ஏற்புடையதல்ல. தேர்வுக் கட்டணத்தை குறைப்பதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்’’ என்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent