இந்த வலைப்பதிவில் தேடு

ஆங்கில மொழித் திறனை வளர்த்துக்கொள்ள 'லெவல்-அப்' தன்னார்வ திட்டம்

ஞாயிறு, 1 ஜூன், 2025

 




அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில மொழித்திறனை அதிகரிக்க, 'ஆங்கில மொழித் திறன் பயிற்சி' வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. தற்போது இந்த பயிற்சி ஆசிரியர்களுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருக்கிறது.


தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களும் ஆங்கில மொழித் திறனை வளர்த்துக்கொள்ள அரசு உதவ வேண்டும் என்று கல்வியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். கோரிக்கைகள் வலுவடைந்த நிலையில், அரசு பள்ளிகளில் 6, 7 மற்றும் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில மொழித்திறன் பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


தற்போது இந்த பயிற்சி ஆசிரியர்களுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், "அரசுப் பள்ளி மாணவர்களின் அடிப்படை ஆங்கில மொழித் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் 'லெவல்-அப்' என்கிற தன்னார்வ திட்டத்தினை பள்ளி கல்வித்துறை அறிமுகப்படுத்தி அது சார்ந்த செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.


இதன் ஒரு பகுதியாக 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் ஆங்கில மொழி வாசித்தல், பேசுதல், எழுதுதல் ஆகிய அடிப்படை திறன்களை மாணவர்கள் எளிதாக அடையும் வகையில் தொடர் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பயிற்சிக்காக நிகழ் கல்வியாண்டில் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 7 மாதங்களுக்கு மாத வாரியாக இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஜூன் மாதத்தில் 4 வாரங்களுக்கு அடிப்படை ஆங்கில மொழித் திறன் வளர் செயல்பாடுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் அதன் மூன்றாம் அல்லது நான்காம் வாரத்தில் அடுத்து வரும் மாதத்துக்கான மொழித்திறன் இலக்குகள் கொண்ட அட்டவணை வெளியிடப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து 6 முதல் 8 வகுப்புகளில் உள்ள ஆங்கில ஆசிரியர்கள் வகுப்பறையில் வழக்கமான கற்றல் செயல்பாடுகளுடன் இந்த அட்டவணையில் உள்ள செயல்பாடுகள் மூலம் மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்வர்.


கற்பிக்கப்படும் திறன்களை பொறுத்தவரை, தற்போது வெளியிடப்பட்ட அந்த அட்டவணையில் மாணவர்களின் சுய அறிமுகத்தை ஆங்கிலத்தில் கூறுதல், எழுத்துகளை பல்வேறு வடிவங்களில் எழுதுதல், ஆங்கில பாடலை கேட்டு அதன் வரிகளை ஒப்பித்தல், ஆங்கிலத்தில் உயிர், மெய்யெழுத்துகளை சுட்டிக் காட்டுதல், பள்ளி, வசிப்பிடங்கள் குறித்த முழுமையான விவரங்களை ஆங்கிலத்தில் எழுதுதல், மூன்று மற்றும் நான்கெழுத்து வார்த்தையை பிழையின்றி உச்சரித்தல் மற்றும் எழுதுதல், சிறிய அளவிலான பத்தியை நன்கு படித்து உள்வாங்கி பின்னர் அது தொடர்பான கோடிட்ட இடங்களை நிரப்புதல் என பல்வேறு செயல்பாடுகள் இடம்பெற்றுள்ளன.


இந்தத் திட்டம் சார்ந்த பயிற்சிகளை மாணவர்களுக்கு முறையாக வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.


தொடர்ந்து, திட்டத்தின் செயல்பாடுகள் மூலம் மாணவர்கள் பெற்ற அடிப்படை ஆங்கில மொழித் திறன் அடைவு குறித்து உரிய கால இடைவெளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்." என்று பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் முதன்மைக் கல்வி இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.


தமிழக பள்ளிக்கல்வித்துறையின் இந்த முயற்சியின் மூலம் எதிர்காலத்தில் அரசு பள்ளி மாணவர்களும் சிறந்த ஆங்கில புலமையுடன் உருவாகுவார்கள் என்று கல்வியாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent