ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு கல்வியாண்டின் இறுதிநாள் வரை மறுநியமனம் வழங்க இயலாது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெற்றாலும், அவர்கள் கல்வியாண்டின் கடைசி வேலைநாள் வரை மறுநியமனம் செய்து கொள்ள கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 28-ந் தேதி பள்ளிக்கல்வித்துறை அரசாணையாக வெளியிட்டு இருந்தது.
இந்த நிலையில் அந்த அரசாணையில் திருத்தம் செய்து கல்வியாண்டின் இறுதி நாள் (அதாவது மே 31-ந் தேதி) வரை மறுநியமனம் வழங்க அனுமதி அளித்து ஆணை வழங்க கடந்த ஏப்ரல் மாதம் பள்ளிக்கல்வி இயக்குனர் அரசிடம் கேட்டு இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் சந்திரமோகன், பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஓய்வுபெற்ற பின், மறுநியமனம் வழங்கும்போது கல்வியாண்டின் இறுதிநாள் (மே 31-ந்தேதி) வரை மறுநியமனம் செய்யும் கோரிக்கையினை ஏற்க இயலாத நிலை உள்ளது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, அதனை சுட்டிக்காட்டி, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக