பள்ளி மாணவர்களுக்கு புதிய பாடநூல்களை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வகுப்பறையில் அமர்ந்து ஆசிரியர் நடத்திய பாடத்தையும் பார்வையிட்டார்.
இந்த கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அவற்றை வழங்கி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லாப் பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்களோடு, புத்தகப்பைகள், காலணிகள், காலேந்திகள், காலுறைகள், மழைக்கோட்டுகள், கம்பளிச்சட்டைகள், வண்ணப்பென்சில்கள், கிரையான்ஸ், கணித உபகரணப் பெட்டிகள், கணுக்காலேந்திகள் மற்றும் புவியியல் வரைபடங்கள் என பல்வேறு கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது.
2025-26ம் கல்வியாண்டில் சுமார் ரூ.311 கோடி மதிப்பிலான 4.30 கோடி பாடநூல்கள், சுமார் ரூ.457 கோடி மதிப்பிலான 1.3 கோடி சீருடைகள், ரூ.162 கோடி மதிப்பிலான 9.6 கோடி நோட்டு புத்தகங்கள் மற்றும் ரூ.211 கோடி மதிப்பிலான பல்வேறு கல்வி உபகரணங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவிகளுக்கு பாடநூல்கள், சீருடைகள் மற்றும் பல்வேறு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மாணவ, மாணவியர்களுக்கு பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பல்வேறு கல்வி உபகரணங்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகளுக்கு பாடநூல்கள், சீருடைகள் மற்றும் பல்வேறு கல்வி உபகரணங்கள் வழங்கி, அவர்களுடன் கலந்துரையாடினார்.
அதைத் தொடர்ந்து, திறன்மிகு வகுப்பறையில் மாணவர்களோடு அமர்ந்து ஆசிரியர் நடத்திய பாடத்தினையும் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் த.வேலு, இ.பரந்தாமன், துணை மேயர் மு.மகேஷ்குமார், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் சந்தரமோகன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் பொ.சங்கர், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக