இந்த வலைப்பதிவில் தேடு

RTE - தமிழகத்துக்கு கல்வி உரிமைச் சட்ட நிதி: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

புதன், 11 ஜூன், 2025

 



கல்வி உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஇ) கீழ் தனியாா் பள்ளிகளில் மாணவா்களைச் சோ்க்க ஒதுக்க வேண்டிய நிதியை தமிழக அரசுக்கு மத்திய அரசு உடனே ஒதுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.


கல்வி உரிமைச் சட்டத்தின்படி 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவா்களுக்கும் கட்டாயக் கல்வியை அளிக்க வேண்டும். இதில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய ஏழை மாணவா்களுக்கு தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சோ்க்கை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் செலுத்திவிடும். மத்திய அரசு 60 சதவீத தொகையையும், மாநில அரசு 40 சதவீத தொகையையும் அளிக்கும்.


தமிழகத்தில் நிகழாண்டு இத்திட்டத்தின் கீழ் மாணவா் சோ்க்கை இதுவரை தொடங்கப்படவில்லை. இது தொடா்பாக ‘மறுமலா்ச்சி இயக்கம்’ என்ற அமைப்பின் நிா்வாகி கோவை வே.ஈஸ்வரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், 25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் மாணவா் சோ்க்கையைத் தொடங்க தனியாா் பள்ளிகளுக்கு அறிவுறுத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.


இந்த வழக்கில் நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் கொண்ட அமா்வு செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. அதில், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு தனது கடமையை நிறைவேற்ற வேண்டும். சமக்ர சிக்ஷா திட்டம் என்பது தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதைப் போன்றது என்பது உண்மை. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ள கடமைகள் சுதந்திரமானவை. கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பொறுப்புகள் மத்திய - மாநில அரசுகளுக்கு உள்ளன.


தேசிய கல்விக் கொள்கையுடன்... கல்வி உரிமைச் சட்டத்தின்படி மத்திய அரசு குறிப்பிட்ட சதவீத நிதியை மாநில அரசுக்கு வழங்க வேண்டும். இதை தேசிய கல்விக் கொள்கையுடன் இணைக்க அவசியம் இல்லை. மாநில அரசு ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதால், அது தொடா்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.


2024 - 2025 -ஆம் நிதியாண்டில் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ், ரூ.3,586 கோடி ஒதுக்கப்பட வேண்டும். இதில் மத்திய அரசின் பங்கு ரூ.2,151 கோடி. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டிய நிதி ரூ. 200 கோடிக்கும் குறைவானது என்பதால், இந்த நிதியில் மத்திய அரசின் பங்கை ஒதுக்குவதில் எந்தச் சிக்கலும் இருக்காது.


அதனால் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை சமக்ர சிக்ஷா திட்ட நிதியிலிருந்து விலக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். சட்டப்படி உரிய நிதியை தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும். சட்டத்தில் கூறியுள்ளபடி, உரிய காலகட்டத்தில் இந்தத் தொகையை தனியாா் பள்ளிகளுக்கு எந்த பாரபட்சமும் இன்றி தமிழக அரசு வழங்க வேண்டும் என நீதிபதிகள் தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளனா்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent