எப்படியாவது அரசு பணிக்கு சென்று விட வேண்டும் என கஷ்டப்பட்டு படித்து அந்த கனவு நினைவாக்க பலரும் இரவு பகலாக உழைத்து வருகிறார்கள். அப்படித்தான் விழுப்புரத்தை சேர்ந்த சிவரஞ்சினி என்ற பெண் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.
ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை ஆசிரியர் பணியில் சேர்ந்து 10 நாட்களில் சிவரஞ்சினிக்கு நடக்கக் கூடாத சம்பவம் நடந்துள்ளது. விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு காரில் சென்ற போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விழுப்புரம் தனலட்சுமி கார்டன் மூவேந்தர் நகரை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி சிவரஞ்சினி (வயது 28). ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார். சமீபத்தில் தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியராக பணி நியமனம் பெற்றார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் ஆசிரியராக பணி நியமனம் செய்யப்பட்டார்.
ஆசிரியராக பணி நியமனம்
கடந்த 2023-24 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களில் சிவரஞ்சினியும் ஒருவர். இவருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இவ்வாறு பணியாற்றி வரும் 2,715 ஆசிரியர்களுக்கு பயிற்சி தொடக்க விழா நேற்று காலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக சிவரஞ்சினி சென்னை செல்ல திட்டமிட்டார். சிவரஞ்சினி மட்டும் இன்றி அவரது தோழிகள் சிலரும் இந்த தேர்வில் வெற்றி பெற்றிருந்தனர். திருச்சி பாலகரை மல்லிகைபுரத்தை சேர்ந்த நெகர்நிஷா (47), கடலூர் மாவட்டம் நல்லாத்தூரை சேர்ந்த கவுசல்யா (23), கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணியந்தல் பகுதியை சேர்ந்த பூவிழி (35) ஆகியோரும் ஒன்றாக ஒரே காரில் செல்ல முடிவு செய்தனர்.
கார் மீது லாரி மோதியது
இதையடுத்து நேற்று அதிகாலை அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வாடகை காரில் செல்ல பஸ் நிலையம் வந்தனர். அப்போது அவர்களுடன் நெகர்நிஷாவின் கணவர் ஷாகுல்அமீது (52), கவுசல்யாவின் கணவர் எல்லப்பன், பூவிழியின் கணவர் முருகன் ஆகியோரும் உடன் வந்தார்கள். காரை கடலூரை சேர்ந்த சூர்யா (27) என்பவர் ஓட்டி வந்தார்.
கார் அதிகாலை 5 மணியளவில் அய்யூா் அகரம் என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தது. அங்கு மேம்பால பணிகள் நடந்து வருவதால் டிரைவர் சூர்யா, காரை எதிர்திசை சாலையில் திருப்பினார். அப்போது அந்த சாலையில் வந்து கொண்டிருந்த லாரி இவர்களது கார் மீது மோதியது. கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த கோர விபத்தில் காரில் இருந்த பலரும் பலத்த காயமடைந்தனர்.
பணிக்கு சேர்ந்த 10 நாளில்
ஷாகுல்அமீது, ஆசிரியை சிவரஞ்சினி ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். நெகர்நிஷா, கவுசல்யா, பூவிழி, எல்லப்பன், முருகன், கார் டிரைவர் சூர்யா உள்ளிட்ட 6 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஆசிரியராக பணியில் சேர்ந்து 10 நாட்களில் சிவரஞ்சினி உயிரிழந்தது அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக