உதவிப் பேராசிரியர் பணிக்கான 2-ம் கட்ட சிஎஸ்ஐஆர் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் அக்.27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.
இந்த தேர்வு தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுக்கு இருமுறை கணினிவழியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு சில அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்படும்.
அதன்படி நடப்பாண்டு 2-ம் கட்ட சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு டிச.18-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு நேற்றுடன் முடிந்தது. இந்நிலையில், பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் அவகாசம் அக்.27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பட்டதாரிகள் /csirnet.nta.ac.in/ என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய அக்.30, நவ.1-ம் தேதிகளில் வாய்ப்பு வழங்கப்படும்.
இந்த தேர்வானது ஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடைபெறும். தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி மூலமாக அல்லது csirnet@nta.ac.in எனும் மின்னஞ்சலில் தொடர்புகொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக