இந்த வலைப்பதிவில் தேடு

வினாத்தாள் விவகாரம் : தமிழகம் முழுவதும் அதிகாரிகள் ரகசிய விசாரணை துவக்கம்

புதன், 25 டிசம்பர், 2019




வினாத்தாள் வெளியான விவகாரம் கல்வித்துறை வட்டாரத்தில் விஸ்ரூபம் எடுத்துள்ளது. இதுகுறித்து கல்வி அதிகாரிகள் ரகசிய விசாரணையை மேற்கொண்டுள்ளனர். தமிழக கல்வித்துறை சார்பில் கடந்த சில ஆண்டுகளாக ஆண்டிறுதித்தேர்வு மட்டுமின்றி 9 முதல் 12ம் வகுப்பு வரை காலாண்டு, அரையாண்டு தேர்வுகளும் பொதுத்தேர்வுகளாகவே நடத்தப்படுகின்றன.


மாணவர்கள் ஆண்டிறுதி பொதுத்தேர்வை  பயமின்றி எதிர்கொள்ள இந்த தேர்வுகளும் அதே பானியில் நடத்தப்படுகின்றன. இதற்காக காலாண்டு, அரையாண்டு தேர்வுகளுக்கு உரிய வினாக்கள் பொதுவாக தயாரிக்கப்பட்டு அவை மாநில அளவில் சிடியாக அந்தந்த மாவட்ட  முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது. 

சிடியை பெற்றகொள்ளும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் குறிப்பிட்ட அச்சகங்களில் கொடுத்து பாதுகாப்பான முறையில் வினாத்தாள்களை அச்சிட்டு வாங்கி பின்னர் கல்வி மாவட்டங்களில் உள்ள நோடல் மையங்களுக்கு (பாதுகாப்பு மையம்)  தேவைக்கேற்ற வினாக்களை பாட வாரியாக அனுப்பி வைக்கின்றனர். 


ஒவ்வொரு தேர்வுக்கும் தேர்வு அன்று காலையில் குறைந்தது 2 மணி நேரத்திற்கு முன்னதாக வினாத்தாள் கட்டுகளை சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் வாங்கிச்  செல்கின்றனர்.  ஆனால்  சில மலை கிராம பள்ளிகளுக்கு  மட்டும் தினமும் எடுத்து செல்வதில் உள்ள போக்குவரத்து பிரச்னை காரணமாக அனைத்து தேர்வுகளுக்கும் ெமாத்தமாக அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினத்துடன் முடிந்த நடப்பு கல்வியாண்டிற்கான அரையாண்டு தேர்வுக்கு உரிய பிளஸ் 2 வேதியியல், உயிரியல், பிளஸ் 1 உயிரியல், 10ம் வகுப்பு சமூக அறிவியல் உள்ளிட்ட சில பாட வினாத்தாள்கள் ஹலோ  மற்றும் ஷேர்சாட் போன்ற செயலிகள் மூலம் வெளியாகி கல்வித்துறையினரை அதிர்ச்சியடைய வைத்தது. இதைக்கண்டு கல்வியாளர்களும் கவலையடைந்தனர். 

வினாத்தாள் முன்னதாக வெளியானதால் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கும்  மன உளைச்சல் ஏற்பட்டது.இதையடுத்து பல மாவட்டங்களில் முன்னதாக வெளியான பாடங்களுக்கு மட்டும் ஏற்கனவே தயார் நிலையில் வைத்திருந்த மாற்று வினாக்கள் அடங்கிய புதிய வினாத்தாள் கட்டுகள் இரவோடு இரவாக தயாரிக்கப்பட்டு வழங்க மாவட்ட  முதன்மைக்கல்வி அலுவலர்கள் ஏற்பாடு செய்தனர்.


ஆயினும் வினாத்தாள் அவுட் ஆனது எப்படியென இன்னும் தெளிவாக ெதரியவில்லை. அந்தந்த மாவட்ட கல்வி அலுலக சர்வர்களில் ஆய்வு செய்த போதும் கண்டுபிடிக்க முடியவில்லை. பிரின்ட் செய்யப்பட்ட பின்னர் அவை காப்பி  செய்யப்பட்டு வெளியிடப்பட்டதா? இந்த செயலை துணிச்சலாக செய்த விபரம் தெரிந்த நபர்கள் யார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்து சில மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளனர்.  

மேலும் கல்வி மாவட்ட அலுவலர்கள் நோடல் மையங்களிலும் முதன்மைக்கல்வி அலுவலர்களால் விசாரணை துவக்கப்பட்டுள்ளது. விடை தெரியாத இந்த தில்லுமுல்லு சம்பவம் கல்வித்துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

இதுகுறித்து கல்வித்துறை வட்டாரத்தினர் கூறுகையில், அந்தந்த மாவட்டங்களில் இருந்து சிடி பெறப்பட்டு மாவட்டங்களிலேயே வினாத்தாள்கள் குறிப்பிட்ட அச்சகத்தில் அச்சடிப்பதால் இந்த நிகழ்வு எங்கேயோ முதல் முறையாக நடந்துள்ளது.  எங்கு தவறு நடந்தது என்பதை விரைவில் கண்டுபிடித்து விடுவோம். அதற்குரிய மேல் நடவடிக்கையும் இருக்கும். வரும் ஆண்டு இறுதி தேர்வுக்கு உரிய வினாத்தாள் கட்டுகள் பாதுகாப்பு மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றனர்.

தனி அதிகாரிகள் நியமனம்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டியில், இனி வரும் காலங்களில் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகாமல் கண்காணிக்க தனி அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.  அதையும் மீறி வினாத்தாள் வெளியானால் அந்த அதிகாரிகளே பொறுப்பாவார்கள்’ என்றார்.


வினாத்தாளில் ரகசிய குறியீடு

ஆண்டிறுதித் தேர்வில் வினாத்தாள்களுக்கு ரகசிய குறியீடுகள் இருக்கும். காலாண்டு அரையாண்டு தேர்வு வினாக்களுக்கு அவை திருடப்படாமல் இருப்பதற்கு ரூபாய் நோட்டில் உள்ளது போல் வினாத்தாளின் ஒவ்வொரு பக்கத்திலும் கிராஸ்  வடிவத்தில் வாட்டர் மார்க் லோகோ அல்லது ரகசிய குறியீடுகளை வைக்க வேண்டும். 

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி ரகசிய குறியீடு வைத்து சிடி தயாரித்து அனுப்பினால் எந்த மாவட்டத்தில் தவறு நடக்கிறது. எங்கு நடந்தது  என்பதை சுலபமாக கண்டறிய முடியும், ரகசிய குறியீடு வைப்பதால் வினாத்தாள் அவுட் ஆவதும் தடுக்கப்படும் என கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent