இந்த வலைப்பதிவில் தேடு

ஏப்.12-க்குள் 4 லட்சம் இலக்கு - அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்த தொடக்கக் கல்வித்துறை உத்தரவு

வியாழன், 11 ஏப்ரல், 2024

 



அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்தி ஏப்ரல் 12-ம்தேதிக்குள் 4 லட்சம் இலக்கை எட்ட வேண்டும் என்று தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து தொடக்கக் கல்விஇயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: 


அரசுப்பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான (2024-25) மாணவர் சேர்க்கை பணிகள் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை (ஏப். 2) 3 லட்சத்து298 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.


இதற்கிடையே அங்கன்வாடி களில் படித்து 5 வயதை நிறைவு செய்யும் 3 லட்சத்து 31,546 குழந்தைகளின் விவரம் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இதுதவிர தற்போது சுகாதாரத் துறை மூலம் 2018-ம் ஆண்டு தமிழகத்தில் பிறந்த குழந்தைகளின் புள்ளி விவரம் பெறப்பட்டுள்ளது. அவையும் பள்ளிகளுக்கு எமிஸ் தளம் வழியாக அனுப்பப்பட்டுள்ளது.


இதையடுத்து ஆசிரியர்கள் அந்த குழந்தைகளின் பெற்றோர் செல்போன் எண்ணுக்கு தொடர்புகொண்டு அதிலுள்ள விவரங்களுக்கு பதில்களை பெற்று பதிவுசெய்ய வேண்டும். அதாவது, தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கை செய்துவிட்டீர்களா என்பதை கேட்க வேண்டும்.


இல்லையெனில் அவர்களின் குழந்தைகளை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்க ஆலோசனை வழங்க வேண்டும். இத்தகைய பணிகள் மூலம் மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்த வேண்டும். மேலும், ஏப்.12-க்குள் 4 லட்சம் மாணவர்களை சேர்க்கை செய்ய இலக்கு வைத்து பணியாற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent