ஜூலை 9ஆம் தேதி திருவாரூர் முதல்வர் முகாம் நிகழ்ச்சியில் பவுத்திரமாணிக்கம் கிராமத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கேட்டு கோரிக்கை மனு அளித்தனர். தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பபின் தலைமை அலுவலக செயலாளர் யோகானந்தம் மற்றும் திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் தலைமையில் மனுவை முதல்வரிடம் கொடுத்தனர்.
இது குறித்து தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார் கூறுகையில், ”12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் குடும்பங்கள் வாழ முதல்வர் திமுக தேர்தல் வாக்குறுதி 181 மூலமாக பணி நிரந்தரம் என்ற விடியல் தர வேண்டும் என கோரிக்கை மனுவை முதல்வரிடம் அளித்துள்ளோம். தற்போது 12,500 ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. அதுவும் மே மாதம் கிடையாது.
மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, போனஸ் போன்ற அரசு சலுகைகளும் கிடையாது. இதனால் 12 ஆயிரம் குடும்பங்கள் பரிதவிகின்றனர். இந்த நிலையில் 15 ஆண்டுகளாக தற்காலிக வேலை செய்வதை மாற்றி பணி நிரந்தரத்தை முதல்வர் கொடுத்தால் தான் பகுதி நேர ஆசிரியர்கள் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும். இந்த பட்ஜெட்டில் பள்ளிக் கல்வி மானிய கோரிக்கையின் போது பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் குறித்து முதல்வர் நல்ல முடிவை அறிவிப்பார் என பள்ளிக் கல்வி அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
இதை நம்பியே 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் வாழ்க்கை உள்ளது. இதற்காக முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு காத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். கடந்த தேர்தல் சமயத்தில் திமுக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. அதில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது மற்றும் பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் ஆகிய கோரிக்கைகள் மிக முக்கியமானவை. தேர்தல் வாக்குறுதி கொடுத்ததால் திமுகவுக்கு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் வாக்களித்தனர். திமுக அரசு ஆட்சியும் அமைத்தது.
ஆனால் இப்போது ஆட்சிக்கு வந்து இத்தனை காலம் ஆகியும் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அடுத்த ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதி எண் 181ஐ நிறைவேற்றி பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.
முன்னதாக, அதிமுக ஆட்சி காலத்தில் திமுக வைத்த பணி நிரந்தர கோரிக்கையைத்தான் பின்னர் தேர்தல் வாக்குறுதியிலும் சேர்த்து பகுதி நேர ஆசிரியர்களுக்கு நம்பிக்கையை கொடுத்தது திமுக. ஆட்சிக்கும் வந்தது. ஆனால் இப்போது ஏதேதோ காரணம் கூறி இன்னும் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பது பகுதி நேர ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் தங்களுக்கு விடியல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் காத்திருக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக