குரூப் 4 பணியிடங்களுக்கான 2 ஆம் கட்ட மூல சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு பிப்ரவரி 24, 25 ஆகிய 2 நாட்கள் டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (குரூப் 4) தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் 22.10.2025 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
முதல் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வின் முடிவில் உள்ள இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பிற பதவிகள், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 24.02.2026 மற்றும் 25.02.2026 ஆகிய இரண்டு நாட்கள் டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மேற்குறிப்பிட்ட இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணையினை தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு அதற்கான விவரம் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். அழைப்பாணை தனியே அஞ்சல் மூலம் அனுப்பப்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு தெரிவு செய்யப்படுவார்கள் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. தேர்வர்கள் மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துக் கொள்ளத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக