இந்த வலைப்பதிவில் தேடு

அரசு பள்ளிகளில் 18,107 ஆசிரியர் பணியிடங்கள் காலி

திங்கள், 22 ஜூன், 2026




கல்வி என்பது வெறும் ஏட்டுச்சுரைக்காய் மட்டுமல்ல; அது ஒரு மனிதனை பண்படுத்துகின்ற, சிந்திக்க வைக்கின்ற உன்னத கருவி. அத்தகைய கல்வியை மாணவர்களுக்கு கொண்டுசேர்க்கும் பாலமாக ஆசிரியர்கள் விளங்குகின்றனர். வெறும் பாடப்புத்தக அறிவை தாண்டி, ஒழுக்கம், சமூகப் பொறுப்பு, ஆளுமைத்திறன் மற்றும் நற்பண்புகளை மாணவர்களிடம் விதைக்கும் அறப்பணியே ஆசிரியர் பணியாகும். அதனால்தான், உலகில் உள்ள அனைத்துத் தொழில்களுக்கும் தாய்த்தொழிலாக, மற்ற அனைத்துத் துறையினரையும் உருவாக்கும் உன்னதத்துறையாக ஆசிரியர் பணி போற்றப்படுகிறது. ஒரு நாட்டின் முன்னேற்றமும், அதன் மனிதவள மேம்பாடும் வகுப்பறைகளில் இருந்தே தொடங்குகின்றன என்பதை உணர்த்துவதே இப்பணியின் முதன்மை நோக்கமாகும்.


18,107 இடங்கள் காலி
அப்படி இருக்கும் ஆசிரியர் பணிகளில் காலி இடங்கள் அரசு பள்ளிக்கூடங்களில் தொடர்ந்து நீடித்து வருவதை பார்க்க முடிகிறது. அந்தவகையில் ஜூன் மாதம் 11-ந்தேதி வரையிலான நிலவரப்படி, ஒப்பளிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 248 ஆக இருக்கும் நிலையில், அதில் 96 ஆயிரத்து 141 இடங்கள் நிரப்பப்பட்டு, 18 ஆயிரத்து 107 இடங்கள் காலியாக இருப்பது பள்ளிக்கல்வித்துறையின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. இந்த புள்ளி விவரங்களில் அதிகபட்சமாக பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்தான் இருக்கின்றன. அதில் 7,252 இடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. அதற்கடுத்தபடியாக 2,833 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு பள்ளியை வழிநடத்தக்கூடிய தலைமை ஆசிரியர் பணியிடங்கள் 1,214 என்ற எண்ணிக்கையில் காலியாக இருக்கிறது. அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 93 என்ற எண்ணிக்கையில் காலி இடங்கள் இருக்கின்றன.

கவனம் செலுத்த வேண்டும்
குறிப்பிட்ட பாடத்திற்கு ஆசிரியர்கள் இல்லாதபோது, மாணவர்கள் அந்தப் பாடத்தின் அடிப்படை தத்துவங்களைப் புரிந்துகொள்ள முடியாமல் திணறுவார்கள். காலியாக உள்ள பணியிடங்களால், பணியில் இருக்கும் மற்ற ஆசிரியர்கள் கூடுதல் வகுப்புகளையும், பிற பாடங்களையும் கவனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்கு மன அழுத்தமும், பணிச்சுமையும் கூடும். எனவே பள்ளிக்கல்வித்துறை இதில் தீவிர கவனம் செலுத்தி காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்பது கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள். பெற்றோரின் கோரிக்கையாக இருக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent