அரசு பள்ளி வளாகத்திலேயே 20க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆட்களை வைத்து உடற்கல்வி ஆசிரியர் முடி வெட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் நாட்றம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தற்போது, கோடை விடுமுறை முடித்து ஜூன் 4-ம் தேதி பள்ளி திறக்கப்பட்ட நிலையில், 2026-27 கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரியும் பழனி, மாணவர்களை முடிதிருத்தம் செய்து பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். இருப்பினும் நேற்று (ஜூன் 9) சில மாணவர்கள் முடிதிருத்தம் செய்யாமல் பள்ளிக்கு வந்துள்ளனர்.
இதனையடுத்து, அதே பகுதியில் உள்ள இரண்டு முடிதிருத்தும் நபர்களை பள்ளிக்கு வரவைத்து சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, பள்ளி வளாகத்தில் வைத்தே உடற்கல்வி ஆசிரியர் பழனி முடி வெட்ட வைத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் சிலர் நேரடியாக பள்ளிக்கு சென்று அவரிடம் பள்ளி வளாகத்திற்குள் எவ்வாறு முடி திருத்தம் செய்தீர்கள் என விளக்கம் கேட்டுள்ளனர்.
அதற்கு அதைப் பற்றி நீங்கள் ஏன் கேட்கிறீர்கள், இன்று நான் தான் தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருக்கிறேன் என பதிலளித்துள்ளார். மேலும், இதுகுறித்து விளக்கம் கேட்க சென்ற நிருபரையும் காணொளியாக பதியவிடாமல் செல்ஃபோனையும் பிடுங்க முயற்சியுள்ளார்.
மாணவர்கள் முடிதிருத்தம் செய்யவில்லை என்றால் அதுகுறித்து பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதை செய்யாமல், ஆட்களை அழைத்து மாணவர்களை வரிசையில் நிற்க வைத்து முடியை வெட்டிய சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு முடி வெட்டப்பட்ட சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக